மக்கள் என்ன சாப்பிடனும்கிறதையும் மோடிதான் தீர்பபானிப்பாரா?.. வெளுத்தெடுக்கும் வேல்முருகன்
மக்கள் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதையும் பிரதமர் நரேந்திர மோடிதான் தீர்மானிப்பாரா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நாட்டு மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதையும் பிரதமர் நரேந்திர மோடிதான் தீர்மானிப்பாரா? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
ஜனநாயகம் இல்லை
மக்கள் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதையும் பிரதமர் நரேந்திர மோடிதான் தீர்மானிப்பாரா? ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு, தான்தோன்றித்தனமாக முடிசூட்டி கொண்ட மோடியின் முடியாட்சி என்று அறிவிக்காததுதான் பாக்கி. அரசை முடக்கிவிட்டு சர்வாதிகார திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் மோடி தன் அதிகார பலம் முழுவதையும் தமிழர்களுக்கு எதிராகவே திருப்பினார். மக்களாட்சி நெறிகளுக்கு மாறாக மன்னராட்சி - முடியாட்சி - என்றே சொல்லும்படியாக அனைத்தும் சர்வாதிகார நடவடிக்கைகளையே தமிழகத்தில் அவர் மேற்கொண்டார்.
பாசிச மனப்பான்மை
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடு இந்தியா. பல மொழி இன மாநிலங்கள்தான் இந்தியாவே தவிர, இந்தியா என்ற வெறும் பெயரின் அதிகாரத்திற்குட்பட்டவை அல்ல மாநிலங்கள். ஆனால் இந்த பன்மைத்துவத்தை ஏற்காத பாசிச மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறார் மோடி. அதனால்தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதாக வழக்கொழிந்து போன சமஸ்கிருத மொழியையும் அதன் வழிப்பட்ட பழமைவாத பிற்போக்கு கலாச்சாரத்தையும் மற்ற மொழியினர் மீது திணிக்கிறார்.
வகுப்புவாத பிளவை அதிகரிக்க...
அதன் மூலம் இந்தியச் சமூகத்தில் மதவாத, வகுப்புவாத பிளவுகளை மேலும் அதிகப்படுத்துகிறார், அகலப்படுத்துகிறார்; மோதல்களையும் சாதல்களையும் உண்டுபண்ணுகிறார், உறுதிப்படுத்துகிறார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அனைத்து நதிகளுக்குமாக ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைக்க முனைகிறார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேக்கேதாதுவில் அணை கட்ட ஒப்புதல் அளிக்கிறார்.
தடுப்பணை கட்டுவதைத் தடுக்கவில்லை
பாலாறு, பாவானியாறு அமராவதியாறு ஆகியவற்றில் அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க மறுக்கிறார். தமிழகத்தின் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது சரிதான் என்கிறார். தமிழக மீனவரைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையின் மேல் நடவடிக்கை எடுக்காமல் அதற்கு ஆதரவாகவே செயல்படுகிறார். தமிழர்களை மீன்பிடி தொழிலிலிருந்தே அப்புறப்படுத்த சிங்கள அரசுடன் சேர்ந்து திட்டமிட்டுக் காய்நகர்த்துகிறார். அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவுத் திட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்து அமைக்கிறார். தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமே இல்லாது செய்திருக்கிறார்.
நீட் தேர்வு
தமிழர்கள் உயர்கல்வியே கற்கக்கூடாது என்று நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளைப் புகுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு போதிய நிதி வழங்காமல் இருக்கிறார்.
மோடி பதவி ஏற்றதிலிருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டார். அந்த வகையில் தமிழக மாணவர்களுக்கு இதுவரை ரூ.1500 கோடியை தராமல் வைத்திருக்கிறார்.
ரூ.17,000 கோடி வழங்கவில்லை
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு சார்ந்த திட்டங்களுக்காக தமிழக அரசுக்குத் தர வேண்டிய பணம் ரூ.17,000 கோடியை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறார். தமிழக விவசாயிகளின் கணக்கில் மத்திய அரசு செலுத்தி வேண்டிய கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு பிரிமியம் தொகை ரூ.385 கோடியை இதுவரை செலுத்தவில்லை. அதைச் செலுத்தியிருந்தால் பல விவசாயிகளின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம்.
பணமதிப்பிழப்பால் பாதிப்பு
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பண மதிப்பிழப்பை அறிவித்து கூலித் தொழில் செய்து பிழைக்கும் அடித்தட்டு மக்கள், சிறு, குறு தொழில் செய்வோர், சிறு, குறு வணிகர்கள் ஆகியோரையெல்லாம் தண்டனைக்குள்ளாக்கினார்.
அத்தனை பொருட்களுக்கும் ஜிஎஸ்டி அதாவது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விகிதங்களை அறிவித்திருக்கிறார். ஜூலையில்தான் அமலாக உள்ளது. இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது என்று இப்போதே போராடத் தொடங்கிவிட்டார்கள்.
சர்வாதிகாரி மோடி
தமிழக அரசையே முடக்கி செயல்பட விடாமல் வைத்து, தனது சர்வாதிகாரத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வருகிறார். ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பை மத்தியிலேயே இதுவரை ஏற்படுத்தாதவர்தான் இந்த மோடி! அது மட்டுமா, மத்திய ஆட்சியாளர்களின் ஊழலை மறைக்கும் விதத்தில் "தகவல் அறியும் உரிமைச் சட்டம்" சரியானபடி செயல்படாதவாறு அதற்குத் தலைமை ஆணையரையே நியமிக்காமல் முடக்கி வைத்திருப்பவரும்தான் இந்த மோடி!
முடியாட்சி
இந்த அளவுக்கு இந்திய - தமிழக அரசியலின் தரம் தாழ்த்தப்பட்டதற்கு மோடியின் முடியாட்சிதான் காரணம். முடியாட்சி என்று சொல்வதற்குக் காரணம், மோடி ஜனநாயக வழியில் வந்தவருமல்ல, ஜனநாயக வழியை ஏற்பவருமல்ல என்பதாலேயே. தேர்தலுக்குப் பின் எம்.பிக்கள் பிரதமரைத் தேர்வு செய்வதுதான் இந்திய அரசமைப்புச் சட்ட வழிமுறை. மாறாக தேர்தலுக்கு முன்பே பிரதமர் என்று சொல்லிக் கொண்டு வருவது எப்படி ஜனநாயக வழிமுறையாகும்? சரி. பிரதமர் ஆனபின் மோடி நாடாளுமன்றத்திற்கே வருவதில்லையே? அப்படியென்றால் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு வேலையே இல்லையா? அப்படி வேலை இல்லை என்றால் அந்த நாடாளுமன்றம்தான் எதற்கு? தேர்தல்தான் எதற்கு? பிரதமர் என்பவர்தான் எதற்கு? ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும்; தமிழகத்தின் உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.