அலங்காநல்லூர் இளைஞர்கள் விடுதலை கோரி அறப்போராட்டத்தில் குதிக்க வேல்முருகன் வேண்டுகோள்
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர
சென்னை: ஏறு தழுவுதல் உரிமைக்காக போராடிய மாணவர் மற்றும் இளையோரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார். மேலும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர் பண்பாட்டு உரிமையாம் ஏறுதழுவுதலை நடத்திட அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும். தமிழகம் தழுவிய அறவழி போராட்டத்தில் தமிழர்கள் இறங்க வேண்டும்.
தமிழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை தன்னெழுச்சி கொண்ட இளையோர் சமூகம் படைத்து வருகிறது. தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு நிகழ்வை நடத்தும் உரிமை மீட்புக்காக அலங்காநல்லூர் மண்ணில் 21 மணிநேர அறவழி தியாகப் போராட்டத்தை இளையோர் சமூகம் நடத்தியிருக்கிறது.
தடியடி காட்டுமிராண்டித்தனம்
இந்த போராட்டத்துக்கு மதிப்பளித்து தக்கதோர் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு அனைவரையும் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அலங்காநல்லூரில் உரிமை மீட்புக்காக போராடியோர் மீது தடியடி நடத்தியதும் காட்டுமிராண்டித்தனமானதாகும்.
தொடர் துரோகம்
தமிழினத்துக்கு துரோகம் செய்வதும் வஞ்சகம் செய்வதும் இந்திய மத்திய பேரரசின் 'தமிழ்நாடு' சார்ந்த கொள்கையாக இருந்து வருகிறது. இதுதான் இந்தியாவின் தமிழ்நாடு சார்ந்த 'வெளியுறவுக் கொள்கையோ" என எங்கள் மாணவர் மற்றும் இளையோர் சமூகம் வீதியில் நின்று முகத்தில் அறைந்தார் போல கேட்டு வருகிறது. ஆனால் எப்போதும் போல இந்திய மத்திய பாஜக அரசு மவுனியாகத்தான் இருந்து வருகிறது.
தன்னெழுச்சி
இத்தகைய மவுனங்களை உடைத்து சுக்குநூறாக்கும் வல்லமை அறவழிப் போராட்டங்களால்தான் உண்டு என்பதை அலங்காநல்லூர் மண்ணில் கைதானோரை விடுவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தன்னெழுச்சி போராட்டங்கள் பறைசாற்றி வருகின்றன.
பீட்டாவிற்கு தடை
ஆகையால் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளையோர் அனைவரையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். தமிழின விரோத அன்னிய கைக்கூலி கும்பலான பீட்டாவை தடை செய்திட வேண்டும். தமிழின பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும்.
அறவழிப் போராட்டம்
எனும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து இடங்களில் அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
அடையாளம் மீட்பு
இது நம் மக்களுக்கான நம் பண்பாட்டு அடையாள மீட்புக்கான புரட்சி! இந்த களத்தில் ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் தமிழராய் கரம் கோர்ப்போம்! நமது போர்க்களம் நமது இன எதிரிகளை அடிபணியச் செய்திடட்டும். வாரீர்! வாரீர்! என அன்புடன் அறைகூவல் விடுக்கிறேன்! கரம் கோர்ப்போம்! களம் வெல்வோம் என்ற வேல்முருகன் கூறியுள்ளார்.