ஜல்லிக்கட்டுக்காக நள்ளிரவிலும் தொடரும் போராட்டம் வரலாற்று நிகழ்வானது.. வேல்முருகன், சீமான்
ஜல்லிக்கட்டுக்காக நள்ளிரவிலும் தொடரும் போராட்டம் வரலாற்று நிகழ்வானது என வேல்முருகன், சீமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெற்று வருவது வரலாற்று நிகழ்வானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நள்ளிரவைத் தாண்டியும் இளைஞர்கள், பெண்கள் கடும் குளிரிலும் கண்ணுறங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இளைஞர்கள் அனைவரும் தங்கள் உரிமையைப் பாதுகாக்க தன்னெழுச்சியுடன் போராட்டத்திற்குத் திரண்டுள்ளனர்.
தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. மத்திய அமைச்சர்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இனியாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் திரண்டு நள்ளிரவிலும் போராட்டம் நடத்தி வருவது ஒரு வரலாற்று நிகழ்வானது என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மாணவர்கள் அறவழியில் போராடி வருவது பாராட்டுக்குரியது ஆகும். சாதி, மதங்களை கடந்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருவது வரலாற்று சிறப்புமிக்கது.
அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.