லுங்கியில் தூக்கு போட்டு கைதி புழல் சிறையில் தற்கொலை.. நீதி விசாரணை நடத்த வேல்முருகன் கோரிக்கை
தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த செந்தில் குமார் தற்கொலை உள்ளிட்ட புழல் சிறையில் நடக்கும் தொடர் தற்கொலைகளுக்கு நீதி விசாரணை நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரியுள்ளது.
சென்னை: சென்னை புழல்சிறையில் கைதிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை புழல் சிறையில் கைதிகள் தற்கொலை செய்துகொள்வதென்பது தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது போல் தெரிகிறது.
நேற்று கைதி செந்தில் குமார் அங்கு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சிறையில் உள்ள ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சிறைத்துறை அளித்த விளக்கத்தில், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் செந்தில் இல்லை என்றும் கனமழை காரணமாக கைதியைக் கவனிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்கொலையில் சந்தேகம்
செந்தில் குமார் போரூரில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது உறவினர்கள் இந்த தற்கொலை பற்றி சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பெற்றோர் குற்றச்சாட்டு
காவலர்களால் தாக்கப்பட்டு கையை அசைக்க முடியாமல் இருந்த செந்தில் குமார் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். செயல்பட முடியாமல் இருந்த கைக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு வந்துகொண்டிருந்தார் என்றும் உறவினர் சொல்கின்றனர்.
கட்சித் தொண்டர்
செந்தில் குமார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றியவர். அந்த வகையில் அவரது தற்கொலை பற்றி உறவினர்களிடம் கேட்டபோது, இந்த தற்கொலை குறித்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நீதி விசாரணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.
நீதி விசாரணை
அவர்களின் சந்தேகத்தைத் தெளிவுபடுத்த, செந்திலின் தற்கொலை குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
கைதி தற்கொலை
ஏற்கனவே இந்த மே மாதம் 10ந் தேதியன்று இதே புழல் சிறையில் இளையராஜா என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. அவர் நிவேதிதா என்ற ஆசிரியை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.
ராம்குமார் தற்கொலை
கடந்த 2016ஆம் ஆண்டு கடைசியில் இதே புழல் சிறையில் ராம்குமார் என்ற கைதி தன் அறைச் சுவரில் உள்ள மின் ஒயரைப் பல்லால் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது. அவர் தமிழகத்தையே மிகுந்த பரபரப்பில் ஆழ்த்திய சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.
கண்டனம்
புழல் சிறையில் இப்படி தொடர் தற்கொலைகள் ஏன் என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தோடு கேட்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. எனவே அதைத் தெளிவுபடுத்துவதற்கும் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார்.