'இந்தியாவின் பால்காரர்' குரியன் பிறந்தநாள் - பால் கேன்; பசு மாடு டூடுள் போட்டு அசத்தும் கூகுள்!
சென்னை: இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின் 94வது பிறந்தநாளை தனது முகப்புப் பக்கத்தில் அழகான டூடுளாக வெளியிட்டு கொண்டாடி வருகின்றது கூகுள்.
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் இந்தியாவின் பால்காரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் தலைவராக வர்கீஸ் குரியன் இருந்துள்ளார். அவரை கவுரவுக்கும் வகையில் அழகான பால் கேன்கள், பசு ஒன்றுடன் அவர் அமர்ந்திருப்பது போன்ற டூடுள் வெளியிட்டுள்ளது கூகுள்.
தோற்றமும், மறைவும்:
1921 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கேரளாவில் பிறந்த வர்கீஸ் குரியன், 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தனது 90வது வயதில் மறைந்தார்.
பால் பொருட்கள் தயாரிப்பு:
முதன்முதலில் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மேம்படுத்திய அவர், கூட்டுறவு அமைப்பு மூலம், அமுல் (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) என்ற வணிகப்பெயருடன் பால் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அமுல் மாதிரி திட்டம்:
அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாகவும் வெற்றிபெற வைத்தார்.
பால் உற்பத்தியில் முன்னேற்றம்:
கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன் இந்தியாவின் வெண்மை புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
இயந்திரவியலில் பட்டம்:
குரியன் சென்னை லயோலாக் கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.
விருதுகளுக்குச் சொந்தக்காரர்:
1946ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ் பட்டத்தை பெற்றார். இவருக்கு பத்ம விருதுகள் உட்பட பல்வேறு உயரிய விருதுககள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அத்தகைய சாதனை மனிதரான வர்கீஸின் பிறந்தநாளை கூகுள் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லையே!