மனிதநேய கட்சியின் புதிய தலைவரானார் ஜவாஹிருல்லா - வெற்றி பெறும் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு
சென்னை: மனித நேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக எம்.ஹெச். ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்தனர். தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்த கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. பாஜக அல்லாத, வெற்றி பெற வாய்ப்பு உள்ள கூட்டணியில் நாங்கள் இடம்பெற விரும்புகிறோம் என்று ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் அமைப்பு மனிதநேய மக்கள் கட்சியாகும்.இந்த கட்சி 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 3 தொகுதிகளில் போட்டியிட்டு அந்த கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமநாதபுரத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரான ஜவாஹிருல்லாவும், வேலூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர்.
சில ஆண்டுகளில் அந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது. ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழிக்கு ஆதரவு கொடுத்தது. பின்னர் கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
2016 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ‘‘மக்கள் நல ன் காக்கும் கூட்டு இயக்கம்'' என்ற பெயரில் ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய 5 கட்சிகளும் ஒரு அணியை அமைத்தன.
மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து போராட்டம் நடத்திய இந்த அணியை அரசியல் கூட்டணியாக வைகோ அறிவித்தார். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்தார். வைகோவின் இந்த முடிவை மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா ஏற்கவில்லை.மக்கள் பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து போராடாவே நாங்கள் கை கோர்த்தோம். மற்றபடி அரசியல் கூட்டணி அல்ல'' என்று அவர் கூறி 5 கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவும் அந்த கட்சி விருப்பத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஜவாஹிருல்லாவின் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். திருவாரூரில் நடந்த மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அதோடு போட்டி பொதுக்குழு கூட்டத்தை எழும்பூரில் நேற்று கூட்டப்போவதாகவும் அறிவித்தார். ஆனால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கட்சியின் நலன் கருதி இந்த கூட்டத்தை ரத்து செய்ததாக தமீமுன் அன்சாரி அறிவித்தார். இதற்கிடையே மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தாம்பரம் மேற்கில் நேற்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக ஜவாஹிருல்லா தேர்ந்தேடுக்கப்பட்டார். சென்னை தாம்பரத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
தீர்மானம் நிறைவேற்றம்
கூட்டத்தில், கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து ஜவாருல்லா எம்.எல்.ஏ. விளக்கி பேசினார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இணை பொதுச் செயலாளர் ஹாருன் ரஷீத் ஆகியோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னடைவு இல்லை
பொதுக்குழு முடிவில் ஜவாருல்லா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் உள்ள 54 மாவட்டங்களில் 52 மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போட்டி பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மக்கள் சென்றதால், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தமீமுன் அன்சாரி நீக்கம்
தமீமுன் அன்சாரி, ஹாருன் ரஷீத் ஆகிய இருவரும் கட்சி பதவியில் இருந்து நீக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் கட்டுக்கோப்பை பேண வேண்டும் என்பதால் அவர்கள் வகித்துவந்த பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை.
வெற்றி வாய்ப்புள்ள கூட்டணி
தேர்தல் கூட்டணி பற்றி முடிவு எடுக்க இன்னும் நாட்கள் உள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்த கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. பாஜக அல்லாத, வெற்றி பெற வாய்ப்பு உள்ள கூட்டணியில் நாங்கள் இடம்பெற விரும்புகிறோம்.
வலிமை இல்லாத கட்சிகள்
மக்கள் நல கூட்டு இயக்கமும் பாஜக அல்லாத கூட்டணி தான். இன்றைய யதார்த்த அரசியலில் வாக்குச்சாவடிகளில் முகவர்களை நியமிக்கக்கூட வலிமை இல்லாத கட்சிகள் தான் அந்த கூட்டணியில் உள்ளது. அந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர்ந்தால் கூட அந்த வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்றார்.
தீர்மானங்கள்
பொதுக்குழுவில், உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசின் மதவிரோத போக்கை கண்டித்தும், காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வலியுறுத்தியும், ஆத்திச்சூடியை அரபில் மொழி பெயர்க்க அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் முடிவு
இதனிடையே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தமீமுன் அன்சாரி, சட்டவிரோதமாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எங்களை நீக்கியுள்ளனர். இயக்கத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்ட என்னையும் சகோதரர் அருண் ரஷீத்தையும் நீக்கியுள்ளனர் என்றார். நாங்கள் அல்லும் பகலும் உழைத்த காரணத்தினாலேயே பேராசிரியர் ஜவாஹிருல்லா தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் என்ன பேசுகிறார் என்று யாருக்கு தெரியாது என்றார் அன்சாரி. எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விரைவில் அறிவிப்போம் என்றும் தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.