வெயில் கொளுத்தினாலும் வெப்பச்சலனத்தால் லேசா மழை வருமாம்!
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் அனல் காற்று வீசி வருகிறது. சென்னை, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் கத்திரி வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி ஒரு கூலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.
பருவமழை காலத்தில் பெய்யும் மழையை விட சுட்டெரிக்கும் கோடை காலத்தில் பெய்யும் மழைக்குதான் வரவேற்பு அதிகம். அடிக்கிற அனலுக்கு மழை எப்போது பெய்யும் என்று ஏங்கித்தவிக்கும் மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
கோடை மழை கொண்டாட்டம்
தென்தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தென்மாவட்டங்களில் மழை
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, மதுரை விமானநிலையம், தேனி மாவட்டம் உதகமண்டலம், தஞ்சை மாவட்டம் மதுகூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. பெரியாறில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
மிதமான சாரல் மழை
மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, கடலூர் மாவட்டம் நெய்வேலி, நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சேலத்தில் பெய்துள்ள மிதமான மழையால் குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லேசான மழைக்கு வாய்ப்பு
இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.