பொள்ளாச்சி, சிவகாசியில் வெளுத்து வாங்கிய மழை... தமிழகம் முழுவதும் இன்று லேசா மழை பெய்யுமாம்!
சென்னை: பொள்ளாச்சி, சிவகாசியில் நேற்று மழை வெளுத்து வாங்கிய நிலையில், லட்சத்தீவு பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியநிலையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்துவருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் கனமழை
பொள்ளாச்சியில் நேற்று பெய்த கனமழை காரணமாக நேரு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சிவகாசியில் சூறைக்காற்று
இதே போல் சிவகாசி மற்றும் விளாம்பட்டி, சித்துராஜபுரம் அனுப்பன்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சிவகாசி பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
வானிலை அறிக்கை
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, மெதுவாக நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் தற்போது நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
மழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மழை அளவு விபரம்
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகியுள்ள மழை அளவு விவரம் வருமாறு. மாமல்லபுரம், வல்லம் பகுதிகளில் தலா 10 செ.மீ., காட்டுமன்னார்கோவில், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 9 செ.மீ., திண்டிவனம், உடுமலைப்பேட்டை, மன்னார்குடி, பாபநாசம் பகுதிகளில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள்
குடவாசல், கள்ளக்குறிச்சி, வலங்கைமான், கும்பகோணம், திருச்சி டவுன் பகுதிகளில் தலா 7 செ.மீ., புதுச்சேரி, மேட்டூர், திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை, விருத்தாசலம், தஞ்சாவூர், ஓமலூர் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தென்காசி-பாளையங்கோட்டை
பெரியகுளம், கேளம்பாக்கம், முத்துப்பேட்டை, நன்னிலம், அறந்தாங்கி, சிதம்பரம், பட்டுக்கோட்டை, மேட்டுப்பட்டி, செய்யூர் பகுதிகளில் தலா 5 செ.மீ., பஞ்சப்பட்டி, துறையூர், காங்கேயம், வேடசந்தூர், வாடிப்பட்டி, மயிலம், அரண்மனைப்புதூர் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாமக்கல் - ஈரோடு
மணிமுத்தாறு, தாராபுரம், கூடலூர், செம்பரம்பாக்கம், சேலம், வால்பாறை பகுதிகளில் 3 செ.மீ., தாளவாடி, பென்னாகரம், தொழுதூர், காரைக்குடி, மேலூர், நாமக்கல், கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் தலா 2 செ.மீ., ஏற்காடு, கோவை, பாளையங்கோட்டை, தென்காசி, உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் வெயில்
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை கொட்டினாலும் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே வெயில் 35 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.