ஆர்.பி.உதயகுமார் ஒரு பச்சோந்தி... போட்டுத்தாக்கும் "தினகரன்" வெற்றிவேல்!
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒரு பச்சோந்தி என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை : அமைச்சர் உதயகுமாரின் நாக்குக்கு நரம்பே கிடையாது. மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர் அவர் ஒரு பச்சோந்தி என்றும் கடுமையாக பேசியுள்ளார் வெற்றி வேல்.
சென்னை: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மாறி மாறி பேசுவார் அவர் ஒரு பச்சோந்தி என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
60 நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கட்சியில் 20 நிர்வாகிகளுக்கு பொறுப்பு கொடுத்தார். இதற்கு எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் சிலரும் டிடிவி தினகரனை கிண்டலடித்துள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் ஆகியோர் டிடிவி தினகரனை கடுமையாக சாடினர். சென்னை அடையாறு டிடிவி தினகரன் இல்லத்திற்கு வந்த எம்.எல்.ஏ.வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்டறிந்த பின்புதான் பொறுப்புகள் வழங்கப்பட்டன என்றார்.
உதயகுமார் பச்சோந்தி
விசுவாசம்னா ஓபிஎஸ் என்று சொன்னார் உதயகுமார், அப்புறம் எடப்பாடி பழனிச்சாமிதான் விசுவாசி என்றார். சசிகலாதான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும், முதல்வராகவேண்டும் என்று முதன்முதலாக தீர்மானமே போட்டவர் உதயகுமார்தான். இன்று மாறி மாறி பேசுகிறார். அவர் ஒரு பச்சோந்தி.
நடிப்பு திலகம்
அமைச்சர் உதயகுமார் மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர். இவர் நாக்குக்கு நரம்பே கிடையாது. நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சியவர். ஜெயலலிதா இருந்தபோது கேள்வி கேட்க தைரியம் இல்லாதவர்கள் தற்போது கேள்வி கேட்பது ஏன்?
அனுமதி தேவையில்லை
அதிமுகஅ அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்று இப்போது பிரிந்துள்ளது. நிர்வாகிகளை நியமிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. சசிகலாதான் பொதுச்செயலாளர் என்பதற்கான அனைத்து ஆதாரமும் இருக்கிறது. சசிகலா சிறையில் இருக்கிறார்.
ராஜினாமா செய்வார்களா?
நிர்வாகிகளை அறிவித்து விட்டு தேர்தல் ஆணையத்தில் அறிவிப்போம். அதிகாரிகளை நியமிக்க கூடாது என்று தெரிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை. சசிகலாவினால் அனைவரும் நியமிக்கப்பட்டவர்கள்தான். வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. எல்லாரும் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். சசிகலாவினால் பதவி அளிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்யத் தயாரா? என்றும் வெற்றிவேல் கேட்டுள்ளார்.