பத்மபூஷணை எதிர்பார்க்கவில்லை... மாஜி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி
சென்னை: எனக்கு பத்மபூஷண் விருது கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. இது பெருமையாக இருக்கிறது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி கூறியுள்ளார்.
ஆனால் இந்த விருது மிகவும் தாமதமாக தனக்கு அளிக்கப்படுவதாக பத்மவிபூஷண் விருது பெறத் தேர்வாகியுள்ள பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கோபாலசாமி, மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் பல வருடம் பணியாற்றியவர் ஆவார். தமிழகத்தின் மன்னார்குடியைச் சொந்த ஊராகக் கொண்டவர். கிரிக்கெட் முதல் கர்நாடக இசை வரை பல விஷயங்களில் ஞானம் கொண்டவர். தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது கலாஷேத்திரா பவுண்டேஷனின் தலைவராக இருக்கிறார்.
இந்த விருடத்தின் பத்ம விருதுகளில் கோபாலசாமிக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரியது. ஒருவருடைய பணி அங்கீகரிக்கப்படும்போது அது சிறந்த தருணமாக மாறி விடும். ஆனால் இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு வியப்புதான், ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
அணு விஞ்ஞானி சீனிவாசன்
மறுபக்கம் பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் தனக்கு விருது தாமதமாக வந்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தாமதப்படுத்தப்பட்ட விருது. 1990ம் ஆண்டிலேயே நான் பத்ம பூஷண் வாங்கி விட்டேன். இப்போது அடுத்த விருது மிகவும் தாமதமாக வந்துள்ளது. எப்போதும் இல்லை என்பதற்குப் பதில் இப்போதாவது வந்ததே என்ற அடிப்படையில் இதை நான் வரவேற்கிறேன் என்றார்.
கன்னியாகுமாரி
பத்ம விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவர் கன்னியாகுமாரி அவசரளா. சிறந்த வயலின் கலைஞரான இவர் கடந்த 40 வருடங்களாக வயலின் இசையில் கொடிநாட்டி வருபவர். தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது குறித்து கன்னியாகுமரி கூறுகையில், நான் கெளரவமாக உணர்கிறேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே எனக்கு ஆசிரியர்கள். கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன் என்றார்.
சுதா ரகுநாதன்
இவர்கள் தவிர சுதா ரகுநாதன், பி.வி.ராஜாராமன், ஆர்.வாசுதேவன் (மறைவுக்குப் பின்னர்) ஆகியோருக்கும் இந்த வருடத்தின் பத்ம விருதுகள் கிடைத்துள்ளன.