இந்தத் தேர்தலில் ரசிகர்களை பேரமைதி காக்கச் சொல்லும் விஜய்!
தேர்தல் வந்தாலே இப்போது விஜய்யின் பெயரும் அடிபட ஆரம்பித்துவிடுகிறது. காரணம் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கம்.
இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறும், விஜய் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக வருவார் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவரது செயல்பாடுகள் இருந்தன.
கடந்த தேர்தலில் பகிரங்கமாக திமுகவை எதிர்த்தும், அதிமுவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார் விஜய். அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்.
அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரானதும், அதிமுக வெற்றிக்கு ஒரு அணில் மாதிரி தானும் உதவியதாகக் கூறினார். அதுதான் அவர் கடைசியாக விட்ட அரசியல் அறிக்கை.
அதன் பிறகுதான் அவரது பிறந்த நாள் வந்தது. அந்த பிறந்த நாளை ஒரு மாநாடு மாதிரி அவரது ரசிகர்கள் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில், நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்கள் இருந்த நிலையில் முன் போலீசார் தடை விதித்தனர்.
அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் அவர் ஒரு முறைகூட அரசியல் பேசவில்லை. நடிப்பதோடு நிறுத்திக் கொண்டார். தலைவா போன்ற அவரது படங்கள் சில சிக்கலுக்குள்ளான போதிலும், அமைதியாக இருந்தார் விஜய்.
நடுவில் ஒரு முறை மட்டும் திருநெல்வேலியில் ரசிகர் மன்றக் கூட்டத்தில் வைத்து நாம் யாரை ஆதரிக்கலாம் என்று கேட்டு ரசிகர்களிடம் வாக்குச் சீட்டு கொடுத்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தினார் விஜய் என்று ஒரு தகவல் வந்தது.
இப்போது மீண்டும் தேர்தல் நேரம். விஜய் யாரை ஆதரிப்பார்...? என்று எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. அவர் அரசியலுக்கு வருவாரா என்று மீடியாவும் பரபரக்காத சூழல். ஆனால் சமீபத்தில் சென்னைக்கு வந்த அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர், 'நாம் எந்தக் கட்சியை ஆதரிக்கலாம்... ஒரு வழிகாட்டுங்கள்' என்று கேட்டார்களாம்.
அதற்கு விஜய் அளித்த பதில்... 'இப்போதைக்கு அரசியல் வேண்டாம். அமைதியாக அவரவருக்கு பிடித்த கட்சிக்கு வாக்களியுங்கள். ஆனால் விஜய் மக்கள் இயக்கம் பெயரைப் பயன்படுத்த வேண்டாம். என் பெயரையும் உபயோகிக்காதீர்கள். அமைதியாக இருங்கள்' என்று சொல்லிவிட்டாராம்.
இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து விஜய்யின் அரசியல் முடியும் அமையும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானார்கள்.