சினிமா கதைகளை சுட்டு சீரியலாக்கும் இயக்குநர்கள்! தலைப்பையுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் சினிமா கதைகளில் இருந்து சுடப்படுவதான். கதை மட்டுமல்ல சில சீரியல்களின் தலைப்பும் கூட அப்படியே சீரியலுக்கு வைக்கின்றனர்.
சென்னை: ஹாலிவுட், கொரிய மொழி திரைப்படங்களை சுட்டு தமிழ் சினிமா எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இப்போதோ சினிமா கதைகளை சுட்டு சீரியல் எடுக்கின்றனர். சினிமா பட தலைப்பையே சீரியலுக்கும் வைக்கின்றனர்.
விஜய் டிவியில் பல சீரியல்கள் சினிமா கதையை தழுவியே எடுக்கப்படுகிறது. பல சீரியல்களின் தலைப்புகள் சினிமா பட தலைப்புகளையே வைக்கின்றனர்.
இப்போது புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் பெயர் ராஜா ராணி. ஆனால் கதையோ ஆர்.கே. செல்வமணியின் செம்பருத்தி படத்தை தழுவியது. நாயகியின் பெயரும் செம்பருத்திதான்.
செம்பருத்தி
தமிழில் ஆர்.கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் 90 களில் ரிலீஸ் ஆனது. வேலைக்கார பெண்ணை திருமணம் செய்யும் பணக்கார வீட்டு பையன் கதைதான். இப்போது அதே கதையை தழுவி தமிழில் சீரியல் எடுக்கின்றனர்.
ராஜா ராணி
ராஜா ராணி திரைப்படம் தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பை எடுத்து சீரியலுக்கு தலைப்பாக்கி விட்டனர். கதை என்னவோ அதே கூட்டுக்குடும்ப முட்டல் மோதல்கள் நிறைந்த கதைதான்.
வேலைக்கார பெண்
ஜூலியும் 4 பேரும் படத்தில் நடித்த ஆலியா மானசா, குளிர் 100 டிகிரி படத்தில் அறிமுகமான சஞ்சீவ் நடித்துள்ள ராஜா ராணி சீரியலில் மூன்று மகன்கள் 3 மருமகள்கள் கதை. ஒரு வேலைக்காரப் பெண் வீட்டின் மகாராணியாகிறாள் இதுதான் சீரியலின் ஒன் லைன். சீரியலில் நடித்தவர்கள் சினிமாவிற்கு செல்வார்கள். இங்கே உல்டாவாக சினிமாவில் நடித்த இளம் நாயகன், நாயகி சீரியலுக்கு வந்து விட்டனர்.
சினிமா பட தலைப்புகள்
விண்ணைத்தாண்டி வருவாயா, பகல் நிலவு என பல சீரியல்கள் விஜய் டிவியில் சினிமா தலைப்புகளில் ஒளிபரப்பானது. அக்னி நட்சத்திரம் படத்தின் கதைதான் பகல்நிலவு. இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.
பாதியிலேயே நிறுத்தம்
விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்படும் பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்படுகின்றன. காரணம் பட்ஜெட், கிரியேட்ஹெட், இயக்குநர்கள் உடனான பிரச்சினை தான். சரத்குமார் தயாரிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற சீரியல் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. சுந்தர் கே. விஜயன் இயக்கினார்.
29 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. அதன்பிறகு அடுத்தடுத்து பல சீரியல்களை களமிறக்கி வருகிறது விஜய் டிவி.