ஜெ.மரணம்.. விசாரணை கமிஷன் வைத்தால் விஜயபாஸ்கரும் சிக்குவார்.. எச்சரிக்கும் நத்தம் விஸ்வநாதன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரண கமிஷன் வைத்தால் அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தாரா என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை கமிஷன் வைத்தால் விஜயபாஸ்கரும் சிக்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்த 3 மாதங்கள் கடந்தும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் விலகாகமல் உள்ளது. இந்நிலையில் அவரது மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு அதிமுக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணை கமிஷன் வைத்தால் விசாரிக்கப்படும் முதல் நபர் ஓபிஎஸாகத்தான் இருப்பார் என்று கூறினார். மேலும் ஜெ.மரணத்தை வைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் பிழைப்பு நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருத்துக்கு பதிலளித்தார்.
அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்த்தாரா என கேள்வி எழுப்பினார். விசாரணை கமிஷன் வைத்தால் அமைச்சர் விஜயபாஸ்கரும் சிக்குவார் என அவர் தெரிவித்தார்.