சட்டசபை செயலாளரை விஜயபாஸ்கர் ஏன் திடீரென சந்தித்தார்?
முதல்வர் எடப்பாடியை சந்தித்த கையோடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீனையும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடியை சந்தித்த விஜயபாஸ்கர் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனையும் சந்தித்துள்ளார். இதனால் அவர் தன்பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று தெரிகிறது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனை எம்எல்ஏ ஆக்கியே தீர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் விஜயபாஸ்கர், தினகரனுடன் சேர்ந்து பணப்பட்டுவாடாவை செய்தார். இவரது செயல்பாடுகள் மூத்த அமைச்சர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் தினகரனிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு விநியோகித்ததாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 50 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரது வீடுகளும் அடங்கும். விஜயபாஸ்கரின் வீட்டில் ஆர்கே நகர் தொடர்பான சோதனை மட்டுமல்லாது துறை ரீதியாக அவர் செய்த ஊழல்கள் தொடர்பாகவும் சோதனை நடைபெற்றது.
இதில் முக்கிய ஆவமங்கள் கைப்பற்றப்பட்டது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீட் தேர்வு தொடர்பாக சந்தித்ததாக கூறும் விஜயபாஸ்கர் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனை சந்தித்ததன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. எனினும் அவர் பதவியிலிருந்து விலகப்படலாம் என்று தெரிகிறது.