அப்பழுக்கற்றவர் என்று விஜயபாஸ்கர் நிரூபித்து விட்டு அமைச்சர் பதவியில் அமரலாம் - ஸ்டாலின்
விஜயபாஸ்கர் அப்பழுக்கற்றவர் என்று நிரூபித்து விட்டு அமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜயபாஸ்கர் வழக்கை சந்திக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குட்கா முதல் குவாரி வரை ஊழல் செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று விஜயபாஸ்கர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனிப்பட்ட அரசியல் கார்தப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது.
இளம் வயதிலேயே ஜெயலலிதா ஆசியுடன் 3 முறை சட்டசபை உறுப்பினராவும், 2 முறை அமைச்சராகவும் பொறுப்பேற்று வேகமாகவும், துடிப்பாகவும் செய்து வருகிறேன். இதனால் எதிர்க்கட்சித்தலைவர் சேற்றை வாரி இறைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்த விமர்சனங்களைத் தாண்டி நான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் நாள் தொலைவில் இல்லை. அந்த மனப்பக்குத்தையும், எதையும் தாங்கும் மன தைரியத்தையும் புரட்சித் தலைவி அம்மா அதிகமாகவே எனக்குள் விதைத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனையப்பட்ட இந்த குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், விஜயபாஸ்கர் அப்பழுக்கற்றவர் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். குற்றமற்றவர் என்று நிரூபித்த பின்னர் அமைச்சர் பதவியில் உட்கார வேண்டும் அதுதான் அவருக்கு அழகு அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன் என்றார்.