சினிமா பிரபலங்களால் கட்சி வளருமா?: குஷ்புவை மறைமுகமாக தாக்கும் விஜயதாரணி
நான் உட்பட காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தவர்கள் பலர் இருக்கிறோம். சினிமா பிரபலங்களால் தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவது தவறு என்று எம்.எல்.ஏ விஜயதாரணி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி கருத்து கூறியுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கட்சிக்கு வருபவர்களை கவுரவிக்கவும், தக்கவைக்கவும் கட்சி பதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் குஷ்புவுக்கு பதவி வழங்கியதில் தவறு இல்லை. அதே நேரத்தில் சினிமா பிரபலங்களால் தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவதும் தவறு.
காங்கிரசுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதை யாராலும் மறுத்து விட முடியாது. இருக்கிற செல்வாக்கை தட்டி எழுப்புகிற திறமை இருக்க வேண்டும்.
காங்கிரசுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பதவிகள் வழங்க வேண்டும்.
நான் உள்பட பலருக்கு கட்சி பதவி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். எம்.எல்.ஏ. பதவி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் பதவி ஆனால் கட்சி பணி செய்வதற்காக எந்த பதவியும் வழங்கியதில்லை.
தமிழகத்தில் காங்கிரசை முன்னணி கட்சியாக மீண்டும் கொண்டு வரமுடியும். திறமை, உழைப்பு மீது நம்பிக்கையோடு செயல்பட்டால் மக்களின் ஆதரவை பெற முடியும் என்று கூறியுள்ளார் விஜயதாரணி.