66வது குடியரசு தினம்... விஜயகாந்த், ஈவிகேஎஸ், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு, தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
66வது குடியரசு தின விழா நாளைக் கொண்டாடப் படவுள்ளது. இந்நிலையில், தமிழக கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக் காத்திடுவோம்:
அந்த வகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மக்கள் தேர்தல் மூலம் தாங்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்ட மக்கள் அரசு தான் குடியாட்சி எனப்படுகிறது.
தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, ஒவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்கப் பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் இந்த நன்நாளில் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டிற்காக தன்னுயிரை கொடுத்த தியாகிகளைப் போற்ற வேண்டும்.
ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக் காத்திடுவோம் என சூளுரைத்து தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் சம உரிமை கிடைக்க சூளுரைப்போம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:-
ஜனவரி 26-ந்தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தியா குடியரசாகி உலகத்தின் மிகப்பெரிய வல்லரசாக திகழ்ந்தாலும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வல்லரசாக உயர்ந்த இந்திய நாட்டில் வேற்றுமை சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, 120 கோடி மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்து உண்மையான குடியரசாக நமது நாடு விளங்கிட சூளுரை மேற்கொள்வோம்.
அர்ப்பணிப்பு உணர்வோடு கடமை ஆற்றுவோம்:
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த லட்சக் கணக்கானவர்களின் தியாக வரலாறை போற்றும் தினமான இக்குடியரசு தினத்தில் நம்மண்ணில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கி, தேசமாந்தர் அனைவரும் சரிநிகர் சமானமாக வாழ்வதற்கு உறுதியேற்போம்.
விவசாயம், கல்வி, சுகா தாரம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறை களிலும் முழுமையான, நிறைவான வளர்ச்சி பெறவும், நாம் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து அர்ப்பணிப்பு உணர்வோடு கடமை ஆற்றவும் நாம் உறுதியேற்போம்.
ஒபாமாவின் வருகை... மோடியின் வெற்றி:
புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஜனவரி 26-ந்தேதி இந்திய திருநாடு அனைத்து சட்ட திட்டங்களும் முறைமைபடுத்தப்பட்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாளாகும். மக்களாட்சி தத்துவத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றிய பொன்னாள்.
பெருமை மிக்க நம் நாட்டின் இவ்வாண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக வருகை தருகின்ற அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விழாவில் தான் கலந்து கொள்வதில் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலைவர்களுடன் நட்புறவு பாராட்டி, அவர்களின் நம்மதிப்பை பெறுவதில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகின்றார். ஒபாமாவின் இந்திய வருகை, மோடியின் அணுகுமுறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
பொருளாதார சமநிலை அடைய உறுதியேற்போம்:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் புதிய அரசியல மைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்த நாளை ஆண்டு தோறும் குடியரசு தின நாளாக கொண்டாடி வருகிறோம். நம்மை நாமே நமக்காக ஆளுகின்ற உரிமை தான் உண்மையான குடியரசாகும்.
மத நல்லிணக்கும், சகோதரத்துவம், சமத்துவ உணர்வோடும் அமைதி தொடர்ந்து நிலவிடவும் தேசபக்தி வளர்ந்திடவும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் கிடைக்கும் வகையில் பொருளாதார சமநிலையை அடைய இந்த குடியரசு தின நன்நாளில் உறுதியேற்போம்.
மேலும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.