திமுக, அதிமுக கொள்ளை அடிக்கும் கட்சிகள்.. விஜயகாந்த் பேச்சு
தஞ்சாவூர்: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கொள்ளை அடிக்கும் கட்சிகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் நேற்று மாலை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், நாங்கள் ஆறு கட்சி கூட்டணி. நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே, எனக்கு முதல்வராவதற்குத் தகுதி இருக்கிறது. தப்பு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பேன். கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி எனக்கு நடிக்கத் தெரியாது.
ஆறு கட்சிகளைச் சேர்ந்த எங்களுக்கு ஏறுமுகம்தான். நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம். அதிமுக, திமுக இரு கட்சிகளும் நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு கட்சிகளும் கொள்ளை அடிக்கும் கட்சிகள். ஆறு கட்சிகளைச் சேர்ந்த யாரும் தூங்கக் கூடாது. வெற்றிக்காக அனைவரும் இரவு, பகல் பாராமல் வேலை பார்க்க வேண்டும்.
இப்போது, நடப்பது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையேயான போர். நாங்கள் தர்மம்.
திமுக, அதிமுக அதர்மம். திமுக, அதிமுகவுக்கு வாக்கு கிடையாது எனக் கூற வேண்டும். அவர்கள் காசு கொடுத்தாலும் வாக்களிக்காதீர்கள் என்றார் விஜயகாந்த்.