கரண்ட் வருவதை கன்பார்ம் செய்ய கம்பியில் கை வைக்க வேண்டும்: அமைச்சருக்கு விஜயகாந்த் அழைப்பு
கரூர்: மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திரும்ப திரும்ப கூறிவருகிறார். அவர் மின்சார கம்பியை தொட்டு அதை உறுதி செய்துகாட்டுவாரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்தார்.
தேமுதிக சார்பில் 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம், தரங்கம்பாடியில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை சம்பவமே நடக்கவில்லை என்று அத்துறை அமைச்சர் கூறிவருகிறார். ஆனால், விவசாயிகள் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படியானால், இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மின்வெட்டு கிடையாது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசிவருகிறார். மின்சாரம் வருகிறது என்பதை நிரூபிக்க மின் கம்பியை அவர் தொட்டுக்காண்பிப்பாரா? மின்சாரம் வருகிறது, வரப்போகிறது என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர் தேவையில்லை.
காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழக போலீஸ் விசாரித்தால் உண்மை வெளியே வராது என்றார்.