'குற்றவாளி' மக்களின் முதல்வர் என்றால் பன்னீர் செல்வம் யாருக்கு முதல்வர்?: கேட்பது விஜயகாந்த்
சென்னை: சிறைக்குப் போன ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால், பன்னீர்செல்வம் யாருக்கு முதல்வர் என்று விளக்க வேண்டும் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் குறைந்த பட்சம் ஒரு வார காலம் நடத்துவதுதான் மரபாக இருந்தது. ஆனால் தற்போது கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அதில் பேசிய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கும் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்றும், அவரது வழிகாட்டுதலின்படி தான் ஆட்சி நடைபெறுகிறது என்றும் பேசியுள்ளார்கள்.
அவர் மக்கள் முதல்வர் என்றால், ஓ.பன்னீர்செல்வம் யாருக்கு முதல்வர்?. தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வரா, இல்லையா? என்பதை தமிழக மக்களுக்கு அவர் விளக்கிட வேண்டும்.
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், ஏழை, எளிய மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர், ஆகியோர் மட்டுமே 'மக்கள் முதல்வர்' என்று சொல்லப்பட வேண்டியவர்கள்.
ஜெயலலிதாவின் படத்தை அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்தும், அரசினுடைய விளம்பரங்களில் இருந்தும் அகற்றப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
அவ்வழக்கில் ஆஜரான அ.தி.மு.க. அரசின் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, முன்னாள் முதல்வர் படத்தை வைப்பதற்கு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்று வாதம் செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முதலமைச்சர் ஆன பின்பு தோல்வியையே சந்திக்காத புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆகியோரின் படங்களை கட்டாயம் அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
அரசு ஆணை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்பதை கருத்தில் கொண்டு இந்த அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதை அடுத்து பதவி இழந்தார் ஜெயலலிதா. உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கும் போது ஜெயலலிதாதான் தமிழக அரசை வழிநடத்துவதாக தோற்றம் தரமாட்டோம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கடந்த வாரம் சட்டசபை கூட்டத்தில் பேசிய போது ஜெயலலிதாதான் அரசை வழிநடத்துகிறார் என கூறியதால் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.
ஓ. பன்னீர் செல்வம் பேச்சுக்கு கருணாநிதியும் சில நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் அளித்த நிபந்தனையை மீறுவதாக கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார். வரும் 18-ந் தேதி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வமான பேச்சு ஜெயலலிதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.