அன்பான ஆர்கே நகர் வாக்காளப் பெருங்குடி மக்களே! இதோ உங்களைத் தேடி வருகிறார் 'கேப்டன்'..'கேப்டன்'
ஆர்கே நகர் தொகுதியில் ஏப்ரல் 6-ந் தேதி முதல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சென்னை: விறுவிறுப்பாக மட்டுமே நடந்து கொண்டு இருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தை அமர்க்களப்படுத்த வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஏப்ரல் 6-ந் தேதி முதல் 3 நாட்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுகிறார். இதுவரை தேமுதிக முழு வீச்சில் பிரசாரத்தை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சாதாரண செக்கப்புக்காக மருத்துவமனைக்கு சென்றவர் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. இதனால் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
3 நாட்கள் பிரசாரம்
இந்த நிலையில் விஜயகாந்த் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 3 நாட்கள் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவித்துள்ளார் பிரேமலதா. திரைப்படங்களில் பேசுவதைப் போலவே அரசியல் மேடைகளில் வரிந்து கட்டி வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தவர்தான் விஜயகாந்த்.
வேட்பாளர்களுக்கு அடி
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் பிரசார மேடை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே மாறிவிட்டது. பிரசார பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் உள்ளிட்ட யாரையோ ஒருவரை அடிப்பதையே வழக்கமாக சில காலம் வைத்திருந்தார் விஜயகாந்த்.
பேச்சு குறைப்பு
அதன்பின்னர் அவரது குரலில் சில மாற்றங்கள் தென்பட அவர் பேசுவதே புரியாத ஒன்றாக இருந்தது. இதன் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் பேசுவதையே பாதியாக குறைத்துவிட்டார்.
எஸ்கேப் யுக்தி
இதனால் கடைசியாக கொஞ்ச நேரம் இருக்கும் போது மேடையேறுவார் விஜயகாந்த். பின்னர் நேரமாகிவிட்டது நேரமாகிவிட்டது என 5 நிமிடங்கள் கை கடிகாரத்தைப் பார்த்தபடியே கூறிக் கொண்டே மக்கழே! நன்றி வணக்கம் விடைபெறுகிறேன் என சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுவார்.
ரோபோ விஜயகாந்த்
தற்போது சமீபகாலங்களாக மேடைகளில் பேசுவதை அறவே குறைத்துக் கொண்டார். அத்துடன் தொண்டர்களுடன் புகைப்படம் எடுக்கின்றபோது கூட ஒரு ரோபோவைப் போல அமர்ந்து கொண்டு கைகளை இறுக்கி கட்டிக் கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாதவராக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆர்கே நகரில் பிரசாரம்
இந்த நிலையில்தான் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார கூட்டங்களில் என்னதான் செய்வாரோ விஜயகாந்த் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளது.