அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்: தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் - விஜயகாந்த் வேண்டுகோள்
சென்னை: தேமுதிக தொண்டர் தற்கொலை செய்து கொண்டதற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கொங்கராயனூர் கிளைக்கழக செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.
தற்கொலை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி வெற்றிபெற வேண்டும் என்கின்ற தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்கவேண்டும்.
அரசியலில் தேர்தல் என்பது வரும், போகும் அதில் வெற்றியும், தோல்வியும் எவருக்கும் நிரந்தரமல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மாறாக தேமுதிக மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இரண்டு ஊழல் கட்சிகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.
ஆனால் அதிமுகவும், திமுகவும் வாக்களர்களுக்கு பணத்தை கொடுத்து, இத்தேர்தலில் பொய்யான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இதுவே அரசியல் நிரந்தரமல்ல என்பதை கழக தொண்டர்கள் உணரவேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், இதற்கு தற்கொலை ஒரு தீர்வாகாது. எனவே தற்கொலையை என்றும் நான் அனுமதிக்கமாட்டேன்.
இதுபோன்ற தற்கொலை முடிவுகளால் சம்பந்தபட்டவர்களின் மனைவி, குழந்தைகள் எப்படிபட்ட பாதிப்புகளை அடைவார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால், நிச்சயமாக இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். எனது கிளைக்கழக செயலாளர் சுப்பிரமணி, என்மீதும், கழகத்தின் மீதும் அளவுகடந்த பற்றோடு இருந்தவர் என்பது எனக்கு நன்கு தெரியும்.
அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கும், கழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாதது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.