சினிமாப் படப்பிடிப்புகளில் உதவியாக இருந்த பரிசல் முருகன் மரணம்.. விஜயகாந்த் நேரில் அஞ்சலி
ஒகேனக்கல்: ஒகேனக்கலுக்கு விஜயகாந்த் படப்பிடிப்புக்குப் போகும்போதெல்லாம் அவருக்கு உதவியாக இருந்தவரான, பரிசல் முருகன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து விஜயகாந்த் நேரில் சென்று முருகன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சினிமா படபிடிப்பிற்காக கடந்தகாலங்களில் விஜயகாந்த் செல்கின்றபோது, அங்கேயுள்ள காவிரியாற்றில் அவரை பரிசலில் அழைத்து செல்வதும், படபிடிப்பிற்கு தேவையான உதவிகளை செய்வதும், விஜயகாந்த் உதவியாளர் போல் உடன் இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்த பரிசல்முருகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அச்செய்தியை கேட்ட விஜயகாந்த் இன்று (02.08.2015) ஒகேனக்கலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சினிமா படபிடிப்பில் கலந்துகொண்டு சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகியும் பரிசல்முருகன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக நேரில் சென்றார்.
ஆண்டுகள் பல உருண்டோடினாலும் சினிமா படபிடிப்புகளில் அவர் எனக்காக உழைத்தது என்னால் மறக்க இயலவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000/- நிதியுதவி வழங்கினார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினறுக்கு ஆறுதல் கூறினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.