நான் குடிகாரனா?: கல்லீரல் சோதனைக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?- விஜயகாந்த்
விழுப்புரம்: சில பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் நான் குடிப்பதாக தெரிவிக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் எனது கல்லீரலை பரிசோதனை செய்ய நான் ரெடி, நீங்க ரெடியா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகண்டை கூட்டு சாலை அருகே தேமுதிகவின் பொங்கல் விழா திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 500 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
மின்சாரம்
மின்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றி திமுக திட்டமிடவில்லை என்று கூறும் அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மின்சார உற்பத்தி பற்றி அதிமுகவும் ஒன்றும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருபவர்கள் ஒருவரையொருவர் குறை கூறுவதை நிறுத்திவிட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
அணை
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி இருக்க கர்நாடக அரசால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது. இந்நிலையில் இதை தமிழகத்தில் அரசியலாக்கிக் கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா
மத்திய அரசின் வருமான வரி வழக்கில் எலும்பூர் நீதிமன்ற வழக்கில் அபராதம் கட்டிவிடுகிறேன் வழக்கை வாபஸ் பெறுங்கள் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அபராதம் கட்டுகிறேன் என்பவர்கள் குற்றவாளி தானே? அதிமுக அரசு லஞ்சம் வாங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
மக்கள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆளும் கட்சியினர் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். ஆனால் எங்கள் நிகழ்ச்சிக்கோ மக்கள் கூட்டம் தானாக வந்து ஆறு போன்று காட்சியளிக்கிறது.
ஓ.பி.எஸ்.
மீனவர் பிரச்சனை பற்றி முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதை தான் வேலையாக வைத்துள்ளார். பிரதமரை அவர் நேரில் பார்த்து பேசினாரா, இல்லை. ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
கோபக்காரன்
நான் ஒன்றும் ஜெயலலிதா போன்று கோபக்காரன் கிடையாது. சில பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் நான் குடிப்பதாக தெரிவிக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் எனது கல்லீரலை பரிசோதனை செய்ய நான் ரெடி, நீங்க ரெடியா?
முதல்வர்
தமிழக மக்களுக்கு தான் எத்தனை முதல்வர்கள் உள்ளனர். ஒரு பக்கம் மக்களின் முதல்வர், மறுபக்கம் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம். ஏன் இவ்வாறு மக்களை ஏமாற்ற வேண்டும் என்றார் விஜயகாந்த்.
பிரேமலதா
என் கணவர் குடிப்பதாக சில பத்திரிக்கைகள் உண்மைக்கு புறம்பாக எழுதுகின்றன. மது அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும். அவ்வாறு எழுதுபவர்கள் கூறும் மருத்துவமனைக்கு அவரை நான் அழைத்து வருகிறேன். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அவர்கள் கூறுவதை நான் கேட்கிறேன். இதை நான் சவாலாக கூறுகிறேன் என்று நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.