கலாம் பிறந்த நாளை 'தேசிய மாணவர் தினமாக' கொண்டாட வேண்டும்- பிரதமரிடம் விஜயகாந்த் மனு
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளை 'தேசிய மாணவர் தினமாக' கொண்டாட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகழுடல் இன்று ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பேக்கரும்பில் நடைபெற்ற கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை உலகம் முழுவதும் மாணவர்கள் தினமாக கொண்டா pic.twitter.com/agLSSKNTzp
— DMDKParty (@dmdkparty2005) July 30, 2015
பிரதமர் மோடி சிரம் தாழ்த்தி கை கூப்பி வணங்கி கலாம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் கலாமின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி நகர்ந்து சென்றார். அப்போது தலைவர்கள் வரிசையாக கலாமுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு தலைவரையும் பார்த்து பிரதமர் மோடி கைகூப்பி வணங்கினார். அப்போது கறுப்புச் சட்டையுடன் விஜயகாந்த் வர அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவர் தோள்மீது கை போட்டார் பிரதமர் மோடி. அப்போது சுதீஷிடம் விஜயகாந்த் ஏதோ கூற அவர் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து பிரதமர் மோடியிடம் கொடுத்தார்.
பின்னர் தே.மு.தி.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அப்துல் கலாமின் பிறந்த நாளை தேசிய மாணவர் நாளாக கொண்டாட வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் இன்று கடிதம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு உலகத்தையே குறிப்பாக தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் பிறந்தவர் என்பதை தாங்கள் அறிவீர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவிக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தவர் கலாம். தம் வாழ்நாள் முழுவதும் மாணவர் சமூகத்துக்காக சேவையாற்றியவர் அவர்.
அவரது பிறந்த நாளை (அக்டோபர் 15) நாட்டின் இளைய சமூகம் 'தேசிய மாணவர் தினமாக' கொண்டாட வேண்டும். இதற்கான உறுதியான நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.