நடக்கப்போவது சட்டசபை தேர்தல் அல்ல; யுத்தம்: முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த் !
கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் நடக்க இருப்பது சட்டசபை தேர்தல் அல்ல இது ஒரு யுத்தம் என்று முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இன்று மாலை முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது: தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிக மணல் கொள்ளை நடைபெறுகிறது. கிரானைட் ஊழல் வழக்கில் சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
கிரானைட் வழக்கில் நீதிபதி மகேந்திர பூபதி மீது மட்டும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை போதுமானதல்ல. நீதிபதி சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் பி.ஆர்.பழனிச்சாமியை கைது செய்யவில்லை. கிரானைட் விவகாரத்தில் ரூ. 1 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கு என்து பொய்யானது. நான் பேச ஆரம்பித்தால் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் தாங்கமாட்டார்கள். நான் எதற்கும் பயப்படமாட்டேன். திமுக, அதிமுகவிற்கு மாற்று தேமுதிக - ம.ந.கூட்டணி தான்.
ஒரே கொள்கைக்காக தேமுதிக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். நட்சத்திர பேச்சாளரான தமக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ளது சட்டசபை தேர்தல் அல்ல இது ஒரு யுத்தம் என்றார் விஜயகாந்த்.