கன்னம் பிடித்து.. கட்டி அணைத்து.. கேக் ஊட்டி.. பாச மழை பொழிந்த விஜயகாந்த்!
சென்னை: சென்னை மாநகரை இன்று சாரல் மழை நனைத்தது என்றால், தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் இன்று பாச மழையில் நனைந்து மகிழ்ந்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 65வது பிறந்த நாளை இன்று தேமுதிகவினர் மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வழக்கமாக விஜயகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஆனால் சமீப காலமாக அவரையும் கொண்டாட வைத்து விட்டனர் சுற்றியிருப்பவர்கள்.
அதிலும் நள்ளிரவில் குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். நேற்றும் கூட நள்ளிரவில் விஜயகாந்த்தை எழுப்பி உட்கார வைத்து கேக் வெட்டிக் கொண்டாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர் விஜயகாந்த் குடும்பத்தினர்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் தேமுதிகவினர். அதில் விசேஷமே, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக வந்திருந்து கேக் வெட்டி மகிழ்ந்ததுதான்.
வைகோ வந்திருந்தார், திருமாவளவன் உடன் இருந்தார். முத்தரசன் அருகிருந்தார். ஜி.ஆர். மட்டுமே மிஸ்ஸிங். சுதீஷ் உள்ளிட்ட தேமுதிகவினர் புடை சூழ நடந்த இந்த விழாவில் விஜயகாந்த் படு உற்சாகமாகக் காணப்பட்டார். உடல் நலிவு வெளிப்பட்டாலும் கூட அவரது முகத்தில் உற்சாகம் குறையவில்லை.
கருப்புப் கண்ணாடி அணிந்து காணப்பட்ட விஜயகாந்த், வைகோ, திருமா, முத்தரசன் என யாரையும் விடவில்லை. அனைவரையும் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ஆனால் திருமாவளவன் மீது மட்டும் அவர் அதீத பாசம் காட்டியதையும் பார்க்க முடிந்தது.
கேக் வெட்டி விஜயகாந்த் கையில் கொடுத்தபோது அதை அவர் மற்ற தலைவர்களுக்கு ஊட்டுவதில் அதிக ஆர்வம் காட்டினார். முதலில் வைகோ கேக்கை எடுத்து விஜயகாந்த்துக்கு ஊட்டியபோது, அதை வாங்கிய கையோடு, திருமாவை சுட்டிக் காட்டி அவருக்கும் கொடுங்க, அவருக்கும் கொடுங்க என்று விடாமல் வைகோவிடம் கூறினார். இதனால் வைகோ, திருமாவுக்கும் கேக் ஊட்டினார்.
அப்படியும் விடாத விஜயகாந்த், தானும் தன் பங்குக்கு ஒரு கேக்கை எடுத்து திருமாவுக்கு ஊட்டி மகிழ்ந்தார். கூடவே வைகோவுக்கும் ஊட்டினார். முத்தரசனுக்கும் கேக் ஊட்டி மகிழ்ந்தார் விஜயகாந்த்.
மொத்தத்தில் மக்கள் நலக் கூட்டணியினரும், தேமுதிகவினரும் மிகுந்த உற்சாகத்தோடு விஜயகாந்த் பிறந்த நாளைக் கொண்டாடியது அனைத்துத் தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.