மெளனமாக இருந்து புரட்சி செய்து விட்டார்கள் மக்கள்.. விஜயகாந்த்
சென்னை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பாஜக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதாகட்சி அமோக வெற்றி பெற்றதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றியின் மூலம் இந்திய மக்கள் எதிர்பார்த்த ஆட்சிமாற்றத்தை பாரதிய ஜனதாகட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில மக்களும் ஆட்சிமாற்றத்தை விரும்பியே வெற்றி பெற செய்துள்ளார்கள் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மௌன புரட்சியை போல் தற்போதும் மக்கள் மௌனமாக இருந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கும், பாரதிய ஜனதாகட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.