இலந்தை பழுக்கும் என்று இப்போது சொல்லமுடியாது: திமுக கூட்டணிக்கு 'செக்' வைத்த விஜயகாந்த்
சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது முடிவு செய்ய முடியாது அதற்கான நேரமும் இதுவல்ல என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய பேராயர் எஸ்றா.சற்குணம்,, ''தே.மு.தி.க. சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு 3 ஆண்டுகளாக வருகிறேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது, இலவு காத்த கிளியாக, இலவம் பழுக்குமாக என்று பார்க்கிறேன். ஆனால் பழுக்கவில்லை என்றார்.
பழுக்க பாருங்கள்
இனி நீங்கள் இலந்தை பழமாக பழுக்கப் பாருங்கள். அதை நான் பறித்துக் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கக் காத்திருக்கிறேன். இந்த முறையாவது இலந்தை பழுக்கும் என்று நினைக்கிறேன்" என்று தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைப்பது பற்றி மறைமுகமாக பேசினார்.
இது தருணம் இல்லை
அவரைத் தொடர்ந்து மைக் பிடித்த விஜயகாந்த், ''இலந்தை பழம் பழுப்பது தொடர்பாக எஸ்றா சற்குணம் பேசியது, தி.மு.க.வைக் குறிப்பிட்டுத்தான் என எனக்குத் தெரியும். ஆனால், பழுப்பது தொடர்பாக இது முடிவு எடுக்கும் தருணம் இல்லை. இலந்தை பழுக்கும் போது பழுக்கும் என்றார்.
கொள்ளையடிக்கிறாங்க
அதே நேரம், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, சிலர் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
மோசமான ஆட்சி
தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. மக்கள் விரைவில் வெகுண்டு எழுவார்கள்" என்றார்.
கதவை பூட்டிக்கொண்டு
சிறையில் இருந்து வெளியே வந்தபோது டாட்டா காட்டி விட்டு சென்றவர், கதவை பூட்டி கொண்டுள்ளார். அவரை, இன்றைக்கு மக்களின் முதல்வர் என்கின்றனர்.
மக்கள் மீது சுமை
மக்களின் குறைகளை தீர்ப்பவரைத் தான் அப்படி அழைக்க வேண்டும். அவரது ஆலோசனையின் படி ஆட்சி நடத்தும் பன்னீர்செல்வம், அனைத்து சுமைகளையும் மக்கள் மீது இறக்கி வைக்கிறார். பன்னீர்செல்வம், கடிதம் எழுதி எழுதியே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் விஜயகாந்த்.
ஓகே சொல்வாரா விஜயகாந்த்
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை ஒட ஓட விரட்டிய திமுகவினர், லோக்சபா தேர்தலின் போது கூட்டணி அமைக்க முயற்சி செய்தனர். கடந்த முறை கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற போதே பேராயர் எஸ்ரா சற்குணம் அதற்காக கடும் முயற்சி எடுத்தார். அப்போதும் பிடி கொடுக்காமலேயே விஜயகாந்த் பேசி அனுப்பினார். பின்னர் பாஜக உடன் நீண்ட இழுபறிக்குப் பின்னர் கூட்டணி சேர்ந்தார்.
சிக்குவாரா? நழுவுவாரா?
இம்முறையும் வலையை வீசியுள்ளார் எஸ்ரா, வலையில் சிக்குவாரா? அல்லது கழுவுற மீனில் நழுவுவாரா விஜயகாந்த், அது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.