ஓஎன்ஜிசி ஓடும் வரை போராடுங்கள், தேமுதிக துணை நிற்கும்.... விஜயகாந்த் அதிரடி பேச்சு!
கதிராமங்கலத்தில் இருந்து ஓன்ஜிசி ஓடும் வரை போராட்டத்தை தொடருங்கள் தேமுதிக துணை நிற்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் : கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக நடக்கும் அமைதிப் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கதிராமங்கலம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மகளிரணி நிர்வாகி பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது ஆர்ப்பாட்ட மேடையில் விஜயகாந்த் பேசியதாவது : கதிராமங்கலம் போராட்டம் அமைதியான முறையில் நடக்கிறது. 1990ல் ஏதோ ஒரு திட்டம் என்று கிராமத்தில் இருந்த மக்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் நல்ல திட்டம் என்று நிலத்தை கொடுத்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள், சரி வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவும் என்று நிலத்தை கொடுத்துள்ளனர்.
அப்புறம் தான் நிலத்தில் கருப்பாக ஒரு கழிவை கொண்டு வந்து கொட்டிய பிறகு தான் விபரீதம் தெரிந்துள்ளது. மக்களை பாதிக்கும் திட்டம் என்பது தெரிந்து அதை கைவிடச் சொன்னால் கைவிட வேண்டியது தானே அரசுகள். கருணாநிதி முதல்வராக இருந்த போது துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தார் அப்போது 'புரிந்து உணர்ந்து தானே' ஒப்பந்தம் போட்டீர்கள், இப்போது எதிர்ப்பது போல ஏன் வேஷம் போடுகிறார்.
மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக, தேமுதிகவிற்கு வாக்களிக்காதீர்கள். ஓஎன்ஜிசி ஓடும் வரை போராடுங்கள், கதிராமங்கலம் மக்கள் அமைதியான வழியில் தானே போராடுகிறார்கள், நான் அவர்களிடையே போராட்டத்தைத் தூண்டிவிடவில்லை.
கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் பெயரை மேடையில் வாசித்து காட்டினார் விஜயகாந்த். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தினார்.