பிப்.20 மாநாடு: காஞ்சி குலுங்கட்டும்- காலம் கனியட்டும்- ஆட்சி மாறட்டும்... விஜயகாந்த் 'டும்' அழைப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் 20-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் அக்கட்சியின் 'தமிழக அரசியலின் திருப்பு முனை' மாநாட்டில் படுபிஸியாக இருக்கிறார் விஜயகாந்த். இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு தேமுதிக தொண்டர்களுக்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் "காஞ்சி குலுங்கட்டும்... காலம் கனியட்டும்... ஆட்சி மாறட்டும்..." என அழைப்பு விடுத்திருக்கிறார்.
விஜயகாந்த் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே எனும் கொள்கை முழக்கத்தோடு 2005ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடிய மாநாட்டில் தேமுதிக எனும் அரசியல் இயக்கம் துவக்கப்பட்டு தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நமது இயக்கத்தின் சார்பில் பல மாநாடுகளை நாம் நடத்தி இருந்தாலும் ஒவ்வொரு மாநாடும் அந்தந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன.
அந்த வரிசையில் வரும் 20-ந் தேதி சனிக்கிழமையன்று மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் வேடல் என்ற இடத்தில் நடைபெற உள்ள தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு உங்கள் அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழக அரசியலில் தேமுதிக திருப்புமுனையை ஏற்படுத்தும் சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில், துணிந்திடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்துக்கான ஆரம்பம் என்ற லட்சியத்தோடு தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "தமிழகத்தை மீட்க வேண்டும் ஆட்சி மாறத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும் - ஒன்றிணைவோம்- வென்றிடுவோம் என அழைப்பு விடுத்திருக்கிறார்.