கருணாநிதி வீட்டுக்குப் போன விஜயகாந்த்.. தி.மு.கவுடனான கூட்டணிக்கு 'கிரீன் சிக்னல்'!!
சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று தே,மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்திருப்பதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணிக்கு இருவரும் அச்சாரம் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது...
தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற நிலையில் கட்சிகள் கூட்டணிக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலின் போது மெகா கூட்டணியை அமைக்க முடியாமல் போன தி.மு.க. படுதோல்வியை எதிர்கொண்டது.
இதனால் சட்டசபை தேர்தலுக்காவது ஒரு மெகா கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்பதில் தி.மு.க. முனைப்பு காட்டி காய்களை நகர்த்தி வந்தது. இதன் முதல் கட்டமாக தே.மு.தி.க.வை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வந்தார்.
மெகா கூட்டணி தேவை..
இதற்கான பேச்சுவார்த்தைகளை ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தலைமையிலான ஒரு டீம் நடத்தி வந்தது. ஆளும் அண்ணா தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறினால் மீண்டும் அக்கட்சிதான் ஆட்சிக்கு வரும்.. அதனால் நிச்சயம் மெகா கூட்டணி அமைக்க வேண்டும்... கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. கொடுத்த 41 இடங்களை நாங்களும் தருகிறோம் என்பதுதான் தி.மு.க.வின் லாபியாக இருந்தது.
கூடுதல் இடங்கள் ஒதுக்குகிறது தி.மு.க
ஆனாலும் தே.மு.தி.க.வோ கூடுதல் இடங்களைக் கேட்டுவந்தது.. இந்நிலையில் திடீரென தி.மு.க. தலைவர் கருணாநிதியை விஜயகாந்த் அவரது வீட்டுக்கே போய் நேரில் சந்தித்திருக்கிறார்... இதன் மூலம் தே.மு.தி.க.- தி.மு.க.வுக்கு இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே அறிவாலய தகவல்கள் கூறுகின்றன.
தே.மு.தி.க. விரும்புகிற இடங்களைக் கொடுக்க தி.மு.க. ஒப்புக் கொண்டதால்தான் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. கருணாநிதியை சந்தித்த கையோடு அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை ரெடி செய்து டெல்லிக்குப் போய் பிரதமரையும் சந்தித்துவிட்டார் கேப்டன்.
மெகா கூட்டணிக்கான ஒத்திகை
கேப்டனின் இந்த சூறாவளி நடவடிக்கையானது ஒரு மெகா கூட்டணிக்கான ஒத்திகையாகவே இருக்கிறது. தி,மு.க. தலைமையிலான இக்கூட்டணியில் தே.மு.தி.க., காங்கிரஸ், த.மா.கா., புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன..
அதிர்ச்சியில் பாரதிய ஜனதா
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களது தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்கலாம் என கனவு கண்ட பாரதிய ஜனதா கட்சிக்கு தே,மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இந்த அதிரடி நடவடிக்கை பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
பா.ம.க.வையும் இழுக்க தீவிரம்
அதே நேரத்தில் பா.ம.க. தனித்தே போட்டி என அறிவித்து வருகிறது. அதனையும் தி.மு.க. அணிக்குள் கொண்டு வருவதற்கு மும்முரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேபோல் இடதுசாரிகளையும் தி.மு.க. அணியில் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை கடைசி நேர அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்ககக் கூடும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி உதயமாகத் தொடங்கியிருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.