விரக்தி + வெறுப்பில் தொண்டர்கள்... மலேசியாவிலிருந்து "ரிட்டர்ன்" ஆகிறார் விஜயகாந்த்!
சென்னை: பல முக்கியப் பிரச்சினைகள் தமிழகத்தை வாட்டிக் கொண்டுள்ள நிலையில் தலைவர் பாட்டுக்கு மலேசியாவில் போய் உட்கார்ந்து மகன் பட ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று தேமுதிகவினர் புலம்பி வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அடுத்த வாரம் சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பக்கம் காவிரியில் அணைகளை கட்டப் போவதாக கர்நாடகா மிரட்டிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் முல்லைப் பெரியாறு விவகாரத்தை மறுபடியும் இழுபறியாக்க முயன்று வருகிறது கேரளா. கூடுதலாக பாம்பாறு பிரச்சினையையும் அது கிளறி விட்டு வருகிறது.
இடையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பல பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம் நடந்தது. இன்னொரு பக்கம் 5 மீனவர்களை விடுவித்த கையோடு 14 தமிழக மீனவர்களை சிறைபிடித்துள்ளது இலங்கை.
இப்படி அடுத்தடுத்து பல முக்கியப் பிரச்சினைகளில் சிக்கி தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில் விஜயகாந்த் கடந்த மாதம் 30ம் தேதி குடும்பத்தோடு மலேசியாவுக்குக் கிளம்பிப் போனவர் இதுகுறித்துக் கலவலையே படாமல் தனது மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் சகாப்தம் பட வேலைகளில் படு பிசியாக இருந்து வருகிறார்.
இடையில் இரண்டு அறிக்கைகளை மட்டுமே அவர் விட்டார். மற்றபடி ஒரு சத்தத்தையும் காணோம். இதனால் தேமுதிகவினர் கடும் கடுப்பாகிக் காணப்படுகின்றனர். இப்படி தலைவர் முக்கியப் பிரச்சினைகளில் களம் இறங்காமல் மலேசியாவில் போய் உட்கார்ந்திருந்தால் எப்படி கட்சி விளங்கும் என்று புலம்பிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் அடுத்த வாரம் திரும்பவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகள் கூறும் போது விஜயகாந்த் சென்னை திரும்பியதும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு, கூட்டணி வியூகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகள் கருத்தை அறிந்து முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிப்பார் என்றும் கூறினர்.
டிசம்பர் 4ம் தேதி தமிழக சட்டசபையும் கூடுகிறது. ஜெயலலிதா வேறு இல்லை, ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வர். எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சட்டசபையில் கலக்குவாரா கேப்டன் என்ற எதிர்பார்ப்பில் தேமுதிகவினர் உள்ளனர்.