வாசன், திருமாவைத் தொடர்ந்து வைகோவுடனும் விஜயகாந்த் சந்திப்பு!
சென்னை: தன்னுடைய தலைவர்கள் சந்திப்புப் படலத்தின் ஒரு பகுதியாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் இன்று சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை முதலில் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனையும் தொடர்ந்து பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனையும் சந்தித்து அவர் பேசினார்.
அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை ஆழ்வார்ப்பேட்டையில் வைத்து சந்தித்தார். அவருடன் நாளை தான் டெல்லி செல்லும்போது கூட வரும் பிரதிநிதிகளுடன் தமாகா பிரதிநிதிகளையும் அனுப்புமாறு விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். அதற்கு கட்டாயம் தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார் வாசன்.
அதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த்.
வைகோவுடன்
அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் விஜயகாந்த் அடுத்து சந்தித்துப் பேசினார். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு சென்ற விஜயகாந்த், அங்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து அழைப்பு விடுத்தார்.