விஜயகாந்த்தின் 'சண்டே ஸ்பெஷல்'.. கருணாநிதி, வாசன், இளங்கோவன், வைகோ, தமிழிசையுடன் சந்திப்பு!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக தமிழக அரசியல் களத்தை சூடாக்க விட்டார். திடீரென திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அவர் அடுத்தடுத்து பல்வேறு தலைவர்களை சந்தித்து அத்தனை பேரையும் பேச வைத்து விட்டார்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே டல்லடிக்கும். செய்தியாளர்களுக்கும் அப்படித்தான். பெரிய அளவில் செய்தி இருக்காது. அரசியல்களத்திலும் கூட இன்று டல்லாகவே இருக்கும். ஆனால் இன்று எல்லோருக்கும் வேலை கொடுத்து விட்டார் விஜயகாந்த்.
திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் புதுக் கட்சியை ஆரம்பித்தார் விஜயகாந்த். திமுக அரசிடமிருந்து பல நெருக்கடிகளையும் அவர் சந்தித்தார். புதுக் கட்சி ஆரம்பித்த பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்ததில்லை. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். மேததாது அணை விவகாரம் தொடர்பாக கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்துள்ளார்.
பலமுறை தேமுதிகவை தனது கூட்டணியில் இணைக்க திமுக முயன்று வந்தது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பும் கூட விஜயகாந்த்தை கூட்டணிக்குள் இழுக்க முயன்றது திமுக. ஆனால் தேமுதிகவோ, அதிமுகவுடனும் பேரம் பேசி வந்தது. கடைசியில் அதிமுகவுடனான பேரம் படியவே அதிமுக பக்கம் போய் விட்டது தேமுதிக என்று கூறப்பட்டது.
தற்போது வருகிற சட்டசபைத் தேர்தலுக்கும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் இதுவரை விஜயகாந்த் பிடி கொடுக்காமல் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் பாஜக கூட்டணில் இருந்தாலும் கூட இருக்கு ஆனா இல்லை என்ற நிலையில்தான் உள்ளது தேமுதிகவின் நிலை. இப்படியாக ஒரு மாதிரியான குழப்ப நிலையில் இருக்கும் தேமுதிக தற்போது புது ரூட்டில் பயணிக்க ஆசைப்படுவது போலத் தெரிகிறது.
மேகதாது விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பும் தேமுதிக, அதற்காக தனது தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லி போய் பிரதமர் மோடியைச் சந்திக்க வைத்து மேகதாது விஷயத்தில் கர்நாடகத்தை அடக்கி வைக்குமாறு கோரிக்கை விடுக்க நினைக்கிறதாம். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் போய்ப் பார்த்து ஆதரவு திரட்ட விஜயகாந்த் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
கட்சி ஆரம்பித்த பின்னர் அவர் ஜெயலலிதாவை மட்டுமே நேரில் வீடு போய்ச் சந்தித்துள்ளார். மற்ற யாரையும் நேரில் போய் இவராக சந்தித்ததில்லை. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஒவ்வொரு தலைவரையும் அவரவர் இருப்பிடம் போய் சந்திக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
முதலில் இன்று கோபாலபுரம் இல்லம் சென்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். விஜயகாந்த். கருணாநிதி-விஜயகாந்த் முதல் சந்திப்பு என்பதால் கோபாலபுரத்தில் செய்தியாளர்கள் குவிந்து விட்டனர். காவிரிப் பிரச்சினை மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விஜயகாந்த், கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரையும் விஜயகாந்த் சந்தித்தார்.
அனைவரிடம் அவர் அரசியல் உள்பட அனைத்து விஷயங்களையும் பேசியதாக நம்பப்படுகிறது.