கோவிலில் குடியேறிய கிராமப் பெண்கள்.. விஜயகாந்த், திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேச்சு!
வேலூர் : பாலாறு மணல் குவாரிக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்ட 29 பேரை விடுவிக்கக் கோரி, கோயிலில் குடியேறியுள்ள களத்தூர் பெண்களை தனித்தனியே சந்தித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் குறைகளைக் கேட்டறிந்தனர்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்துள்ளது களத்தூர் கிராமம். இப்பகுதி மக்கள் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்தி வந்தனர். எனவே, இது தொடர்பாக களத்தூர் காலனி பகுதி பொதுமக்கள் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி களத்தூர் காலனி பகுதியை சேர்ந்த 20 பேரை அவளூர் போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி களத்தூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று கிராம மக்களை கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
இதனால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் 2 வேன்களில் ஏற்றிச் சென்று, களத்தூரில் இறக்கி விட்டனர் போலீசார். ஆனால், அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வேனில் இருந்து இறங்கிய பெண்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி, இன்ஸ்பெக்டர் காண்டீபன், டிரைவர் மூர்த்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கூடுதல் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மீட்டனர். படுகாயம் அடைந்த டிரைவர் வெங்கடேசனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதா (வயது 32), கவுதமி (27), பாமா (32), பகவதி (28), மகேஸ்வரி (28), செண்பகம் (30), அன்பழகன் (50), சிவா (42), பட்டாபி (62), சுந்தர் (28), ஆனந்தன் (37), மாரிமுத்து (40), பாலு (40), ஏழுமலை (32), குருதாஸ் (23), அஜித் (20), அரிதாஸ் (31), அரி (30), மணிகண்டன் (19) ஆகிய 19 பேரை கைது செய்தனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாருக்கு பயந்து ஆண்கள் பலர் ஊரைவிட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளனர். இதனால் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி அங்குள்ள கிருஷ்ணர் பஜனை கோயில் முன்பு அமர்ந்தனர். அங்கு ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பெண்கள் சரிதா, கவுதமி, பாமா, பகவதி, மகேஸ்வரி, செண்பகம் ஆகிய 6 பேரையும் மாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து களத்தூர் கிராமத்துக்கு வேனில் சென்றபோது அதில் இருந்த அதே கிராமத்தை சேர்ந்த முரளி (25) என்ற இளைஞர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பதற்றத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் இருக்கவும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக போராட்டம்:
இந்த சூழ்நிலையில், கோயிலில் குடியேறியுள்ள களத்தூர் கிராம பெண்களை இன்று சந்தித்து, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது அவர், ‘மாற்று மணல் திட்டத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவில் 6 நதிகளில் மணல் அள்ள தடை உள்ளது, தமிழகத்தில் அதுபோல் எதுவும் இல்லை. கைது செய்யப் பட்டவர்களை இரண்டு நாளில் விடுவிக்காவிட்டால், தேமுதிக போராட்டம் நடத்தும்' எனத் தெரிவித்தார்.
பின்னர் பாலாறில் மணல் குவாரி அமைய உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் விஜயகாந்த்.
திருமாவளவன் சந்திப்பு:
அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் களத்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்தார்.