அப்துல் கலாம் நினைவுநாள்.. விஜயகாந்த் அஞ்சலி- பொன்னாள் என புகழாரம்
சென்னை: சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அம் மா மனிதரின் நினைவு நாள், ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் , முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்சியில் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினம் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாணவர் தினம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், தமிழக மக்களால் மரியாதைக்கு உரியவராக போற்றப்படும் திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தால் மாணவர்கள் தினமாக அறிவிக்கபட்ட நாள்.
நாடு போற்றும் ஜனாதிபதி
நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் முன்னேற்றத்தில் தான் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். தனது வாழ்க்கையை ஆசிரியராக தொடங்கி, பின் விஞ்ஞானியாக இருந்து நம் நாடு போற்றும் ஜனாதிபதியாக வாழ்ந்தவர்.
எளிமையான மனிதர்
ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். தன் சீரிய சிந்தனையோடு அவர் எழுதிய பல புத்தகங்கள் நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
நினைவு கூறும் பொன்னாள்
உலக அரங்கில் நம் இந்திய நாடு வல்லரசாக வரவேண்டும் என்பதற்காக அவர் கண்ட கனவு, ஆற்றிய உரைகள், பணிகள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. அம் மா மனிதர் நினைவு நாள், ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.