சங்கரமூர்த்தியை எதிர்க்கும் ஜெ. நீதிபதி கோபால் கவுடாவை ஏன் எதிர்க்கவில்லை? விஜயகாந்த்
சென்னை: தமிழக ஆளுநராக கர்நாடகாவின் சங்கரமூர்த்தியை எதிர்க்கும் முதல்வர் ஜெயலலிதா, காவிரி வழக்கில் கர்நாடகாவின் நீதிபதி கோபால் கவுடா நியமனத்தை ஏன் எதிர்க்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி முடிவடைவதை அடுத்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கரமூர்த்தையை தமிழக ஆளுநராக நியமித்தால் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு சிக்கலான சூழ்நிலை உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
கோபால் கவுடாவை எதிர்க்கலையே...
அதேபோல் காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடாததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட சுமார் 2500 கோடி நஷ்ட ஈட்டை தரக்கோரி, தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு தாக்கல் செய்த சூட் மனுவை சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதற்கு தமிழக அரசு ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட தமிழக விவசாய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுதல்..
அதேபோல் சுதந்திர தின உரையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேகதாதுவில் அணை கட்ட போவதை உறுதி செய்யும் போக்கில் அவரது உரையில் ரூ.5400 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதையும், அதேபோல் 400 மெகாவாட் மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய போவதாகவும் அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்த்தது போல் தமிழக விவசாயிகளின் நிலை மாறியுள்ளது.
அனைத்து கட்சி தலைவர்களுடன்...
இதற்கு மாறாக தமிழக முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மக்களுக்கு வேண்டிய, இதுபோல் ஆக்கப்பூர்வமான உரையை அளிப்பதற்கு பதிலாக, எப்போதும் நான், எனது, எனது தலைமையிலான ஆட்சியில் என்று தற்பெருமை பேசும் உரையாகவே இருந்தது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பை கண்டிருக்கும் விதத்தில் அதிரடியாக தமிழக விவசாயிகளின் நலனில் முழு அக்கறை கொண்டு, அனைத்து கட்சியையும் ஒன்று கூட்டி பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து இந்த மேகதாது அணை பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்கெட்ட பிறகு....
இல்லையேல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக விவசாயிகளுக்கு, இந்த மேகதாது அணை பிரச்சனை ஆகிவிடும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.