சட்டசபை தேர்தல்.. காங்., தி.மு.க.வுடனான கூட்டணிக்கு சேலத்தில் அடிபோட்ட "கேப்டன்"?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான சிக்னலை சேலம் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கொடுத்திருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் பேசினர்.
ஜெ.க்கு ஜெயில்
இக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அண்ணா திமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மற்றும் அண்ணா திமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பேசி அனைவரும் ஜெயிலுக்குப் போவது உறுதி எனப் பேசினார்.
தி.மு.க. குறித்து மவுனம்
அதே நேரத்தில் ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் தி.மு.க. குறித்து எதுவுமே அவர் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி, தயாநிதி மாறன்களின் ரூ742 கோடி சொத்து முடக்கப்பட்ட நிலையில் தி.மு.க. பற்றி விஜயகாந்த் பேசவில்லை.
காவிரியும் காங்கிரஸும்
இதேபோல் காவிரி பிரச்சனையில் கர்நாடாகாவில் காங்கிரஸ் இருந்த போதுதான் தீர்வு காண முடிந்தது என்று சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் விஜயகாந்த். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் எளிதாக பேச்சுவார்த்தை நடத்த முடிகிறது என்பதுதான் கடந்த கால வரலாறு என்பதை சுட்டிக் காட்டிய கையோடு, வாங்க.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்த்து பேசலாம் என்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த குழுவுக்கும் நானே தலைவராக இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
என்ன சொல்கிறார்?
ஆக கேப்டனின் சேலம் பேச்சு என்பது தி.மு.க., காங்கிரஸை மகிழ்விக்கும் வகையிலானது என்பதில் சந்தேகமே இல்லை என்றே சுட்டிக்காட்டப்படுகிறது.
பா.ஜ.க. குறித்தும் மவுனம்
வழக்கம் போல பாரதிய ஜனதாவை பற்றி அதிகம் விமர்சிக்காமல் அங்கிட்டும் ஒரு கால் இருக்கட்டும் என்ற போக்கையும் சேர்த்தே கேப்டன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புதிய அணி?
ஆக சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. என்ற மெகா கூட்டணிக்கு அடிபோடும் வகையில்தான் விஜயகாந்த் சேலத்தில் பேசியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.