ஆந்திராவாலாக்களை விட்டுவிட்டு தமிழர்களை மட்டும் கொன்றது ஏன்? விஜயகாந்த் கேள்வி!
சென்னை: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆந்திராக்காரர்களும் இருந்த இடத்தில் தமிழர்களை மட்டும் சுட்டுக் கொன்றது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது வேதனைக்குரியது.
இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் 20 தமிழர்களை மட்டும் சுட்டுக் கொன்றது தமிழர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த செம்மர கடத்தலில் ஈடுபடும் கடத்தல் மன்னன் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் சிறையில் இருந்து கொண்டே இது போன்ற செம்மர கடத்தலில் இவர்களை ஈடுபடுத்தி ரயில், கப்பல் மூலமாகவும் கடத்தி கொண்டே இருக்கும் செய்தி வெளிவந்துள்ளது.
இதை காவல்துறை கண்காணித்து தடுக்காதது ஏன்? காட்டில் உள்ள வனவிலங்குகளை கூட சுட்டுக் கொல்லக் கூடாது என்பது சட்டம். ஆனால் குருவியை சுடுவது போல தமிழர்களை சுட்டு படுகொலை செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.
இந்த சம்பவத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணமும், உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தவறு செய்த ஆந்திர காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.