நாளை ஜெ. தீர்ப்பு.. நேற்று இரவே சிங்கப்பூரிலிருந்து 'ரிட்டர்ன்' ஆன விஜயகாந்த்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், சிங்கப்பூருக்குப் போயிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவோடு இரவாக சென்னை திரும்பினார்.
கடந்த ஜெயலலிதா தீர்ப்புக்கு முன்பு வரை விஜயகாந்த் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்தார். அவரது உடல் நலம் காரணமாக அதிகமாக செயல்படாமல் இருந்து வந்தார். மறுபக்கம் அவரது கட்சி வேறு உடைந்து கொண்டு வந்தது. இதனாலும் அவர் வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே புத்துணர்ச்சியோடு வெளியே வந்தார் விஜயகாந்த். காரை எடுத்துக் கொண்டு கவர்னரைப் பார்த்து புகார் மனு கொடுத்து விட்டு வந்தார். ஜெயலலிதா ஜாமீனி்ல் வெளியே வரும் வரை அவர் புத்துணர்வோடு பேசி வந்தார் நடமாடி வந்தார்.
ஆனால் ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் அமைதியானார். மகன் பட வேலைகளில் மும்முரம் காட்டினார். பல முக்கியப் பிரச்சினைகளிலும் கூட அவர் கருத்து சொல்லாமல் இருந்து வந்தார். சிங்கப்பூரிலேயே நீண்ட நாட்கள் முகாமிட்டிருந்தார். திரும்பி வந்தபோது சக்கர நாற்காலியில் அவரைக் கூட்டி வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2ம் தேதி திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் விஜயகாந்த். அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சென்றனர். அவரது சிங்கப்பூர் பயணத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்துக்கு லொக்கேஷன் பார்ப்பதற்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் விஜயகாந்த் சென்றிருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை அவர் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் நேற்று இரவே அவர் மனைவி, குடும்ப மருத்துவருடன் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பி விட்டார்.
நாளை ஜெயலலிதா தீர்ப்பு வரவுள்ள நிலையில் முன்கூட்டியே விஜயகாந்த் சென்னை வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.