மெட்ரோ ரயிலில் பயணித்தபடியே மக்களிடம் குறை கேட்ட விஜய்காந்த்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று காலையில் பயணித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அருகில் அமர்ந்திருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மெட்ரோ ரயில் நல்லா இருக்கா என்றும் கேட்டார். விஜயகாந்தை அருகில் பார்த்த பயணிகளும் பொதுமக்களும் உற்சாகமடைந்தனர்.
சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இன்று காலை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணித்தார். பின்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியினருடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆலந்தூர் ரயில் நிலையம் வந்தார்.
ரயிலுக்காக காத்திருந்த அவரிடம் செய்தியாளர்கள் எந்த ஸ்டேசன் வரை போகப்போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் இன்னும் ரயிலே ஏறலை ஏறிய பின்புதான் தெரியும் என்று கூறினார்.
இதனையடுத்து ரயில் வந்த உடன் ஏறிய அவர், கூட்டம் அதிகமாக இருக்கவே, தினம் இப்படி கூட்டம் வருமா என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.
வயதான தம்பதிகள் அருகில் அமர்ந்து பயணித்தார். திடீரென்று விஜயகாந்த் அருகில் வந்து அமர்ந்த உடன் அந்த தம்பதியர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அப்போது அவரை ஏராளமானோர் சூழ்ந்தனர். அமைதியா உட்காருங்க... டிவியில லைப் போகுது என்று கூறினார்.
அருகில் இருந்த தம்பதியரிடம் பேசிக்கொண்டே பயணித்தார் விஜயகாந்த். அப்போது விஜயகாந்த் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றுமாறு அந்த பெண்மணி கூறவே விஜயகாந்த் கண்ணாடியை கழற்றிவிட்டு சிரித்தார்.
ஓடும் ரயிலில் பேட்டி தர மறுத்து விட்ட விஜயகாந்த் கோயம்பேடு ரயில் நிலையத்தில் பேட்டி தருவதாக கூறினார். அப்போது அருகில் இருந்த பெண்மணியிடம் செய்தியாளர்கள் பேச்சு கொடுத்தனர். விஜகாந்தை நேரில் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர். "அவரு எங்க ஊரு காரருல்ல... மதுரைக்காரரு... ரொம்ப சந்தோசமா இருக்கு" என்று கூறினர்.
தொடர்ந்து கோயம்பேடு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். ரயில் பயணம் எப்படி இருந்தது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் மெட்ரோ ரயில் நல்லா இருக்கு மற்ற மாநிலங்களை விட சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறினார்.
தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதத்திற்கு மேல் இருக்கிறது இப்போதே அது பற்றி கூற முடியாது என்றார்.
இன்று காலையில் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பயணித்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார் விஜயகாந்த்