“நான் ஒரு நாய் வளர்த்தேன்.. அது செத்துப் போச்”... விஜயகாந்த் பிரச்சாரம்!
மதுரை: தேர்தல் பிரச்சார மேடைகளில் சமயங்களில் சம்பந்தம் இல்லாமல் பேசி, மக்களைக் குழப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
வேட்பாளர்களை அடித்து, பத்திரிக்கையாளர்கள் மீது சீறி விழுந்து, கட்சித் தொண்டர்களை நாக்கை துருத்தி கண்டித்து என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சமும் பரபரப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதில் வல்லவர் விஜயகாந்த்.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த். எனவே, அவரது பேச்சைக் கேட்க மக்கள் ஆவலாகவே பிரச்சாரங்களில் பங்கேற்கின்றனர்.
ஆனால், வழக்கம் போல எங்கோ பேச்சைத் தொடங்கி, சம்பந்தமே இல்லாமல் அதை முடித்து சுபம் போட்டு மக்களை குழப்பி வருகிறார் விஜயகாந்த். இதற்கு மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்ட பேச்சும் ஒரு உதாரணம்.
அந்தக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்று சொல்றீங்க. உங்க சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டையும் மக்களுக்கு எழுதிவையுங்கள் பார்க்கலாம்" என முதல்வர் ஜெயலலிதாவிற்கு சவால் விடுத்து ஆவேசமாக தனது பேச்சைத் தொடங்கினார்.
தொடர்ந்து ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டர்கள் பலியாவது குறித்துப் பேசிய விஜயகாந்த், "எனக்கு தொண்டையில் சளி கட்டும். அதனால்தான் மேடையில் இருமுகிறேன். பயந்து கொண்டு இரும மாட்டேன். எனது மக்கள்தானே இருக்காங்க. எதற்கு இருமுவதற்கு பயப்படணும். பத்திரிகைகாரர்கள் எதையாவது எழுதுவாங்க. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்" என்றார்.
மேலும், "ஜெயலலிதாவைவிட கலைஞர் மிகப்பெரிய ஆள். இரண்டு ஜெயலலிதான் கலைஞர். வேஷ்டி கட்டிய ஜெயலலிதாதான் கலைஞர். சேலை கட்டிய கலைஞர்தான் ஜெயலலிதா. இருவருக்கும் அதுதான் வித்தியாசம். எங்கள் கட்சியில் முரட்டு பணம் இல்லை, முரட்டு படை உள்ளது. கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியில் இருக்கும் நண்பர்கள் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? முடியாது!" என ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து அதிரடியாகப் பேசி வந்த விஜயகாந்த் திடீரென தனது டிராக்கை மாற்றினார்.
"நான் ஒரு சினிமாக்காரன். பயங்கர சண்டை போடுவேன். அதுவும் மதுரைக்காரன் பயங்கரமா கோபம் வரும். நான் ஒரு நாய் மாதிரி, சுத்தி நடக்குற விஷயங்களை கரெக்டா கண்டுபிடிப்பேன். என் வீட்டில் நாய் வளர்த்தேன். அது சிங்கம் மாதிரி படுக்கும், தூங்கும். அதை எனது மூத்தமகன் நல்லா வைத்துக்கொள்வான். தப்பு செஞ்சா தொண்டையை கடிச்சிடும். அந்த நாய் இறந்துவிட்டது.
நான் நாய் குட்டிகளுக்கு ஜூலியர், சீசர் என்றுதான் பெயர் வைப்பேன். எனது மகன்கள் வேற பெயரை வச்சுடுவாங்க. இப்ப ஒரு நாய் வளர்க்கிறேன். அது பெயர் லக்கி. அது பாக்க நாய் மாதிரியும் இருக்கும், சிங்கம் மாதிரியும் இருக்கும். மக்களே நன்றி வருகிறேன்" எனப் பேசி தனது பேச்சை முடித்தார்.
எப்படியோ தனது பேச்சைத் தொடங்கி, சம்பந்தமே இல்லாமல் தனது வீட்டு நாய் பற்றிக் கூறி விஜயகாந்த் பேச்சை முடித்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.