மக்கள் பிரச்சினைகளை விட மகன் படம்தான் முக்கியமாப் போச்சு விஜயகாந்த்துக்கு.. தேமுதிகவினர் புலம்பல்!
சென்னை: மக்கள் பிரச்சினை இங்கு அனல் பறக்கிறது. முக்கியப் பிரச்சினைகளில் சிக்கி தமிழக மக்கள், குறிப்பாக விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விஜயகாந்த் மலேசியாவில் போய் உட்கார்ந்து கொண்டு மகன் பட ஷூட்டிங்கை மேற்பார்வையிட்டு வருகிறார் என்று தேமுதிகவினர் எரிச்சலுடன் கூறுகிறார்கள்.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் கட்சி திவாலாகி விடும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
கொங்கு மண்டலத்தை அச்சுறுத்தி வரும் கேரளா கிளப்பியுள்ள பாம்பாறு பிரச்சினை மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை அதிர வைத்துள்ள கர்நாடகத்தின் அணை திட்டம் ஆகியவை தமிழகத்தை அதிர வைத்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைகளில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியக் கட்சிகள் வரிந்து கட்டி கிளம்பியுள்ளன. காவிரி டெல்டா போர்க்களமாகியுள்ளது. பந்த் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் மலேசியாவில் போய் உட்கார்ந்துள்ள விஜயகாந்த் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர் பாட்டுக்கு இருக்கிறார். இதுவரை பாம்பாறு, கர்நாடகத்தின் அணைத் திட்டம் குறித்து அவர் கருத்தே தெரிவிக்கவில்லை, கண்டிக்கவில்லை, கோபப்படவில்லை.
இது தேமுதிகவினரை அதிர வைத்துள்ளது. என்ன தலைவர் இவர் என்று அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம். மக்கள் பிரச்சினையை விட மகன் படம்தான் அவருக்கு முக்கியமாகப் போய் விட்டதா என்று எரிச்சலுடன் பேசுகிறார்களாம்.
ஆவின் பிரச்சினை குறித்து ஒரு அறிக்கை விட்டார். தர்மபுரி குழந்தைகள் பலிகுறித்து ஒரு அறிக்கை விட்டார். அவ்வளவுதான், அதற்குப் பிறகு அவரிடமிருந்து சத்தமே இல்லை. இப்படி இருந்தால் கட்சியை இழுத்து மூடி விட்டுப் போக வேண்டியதுதான் என்று தேமுதிகவினர் பலரும் புலம்புகிறார்களாம்.