தினமலர், ஆனந்தவிகடன் மீது கை வைத்த ஆளும்கட்சியினர் 'இந்திய டுடே'யை விட்டு வைத்தது ஏன்?: விஜயகாந்த்
சென்னை: தினமலர், ஆனந்த விகடன் பத்திரிகைகளை பறிமுதல் செய்த அதிமுகவினர், இந்தியா டுடே பத்திரிக்கையை விட்டு வைத்திருப்பது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் வளர்ச்சியை, இருபதாவது இடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு சென்றிருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்திய அளவில் மாநிலங்களின் வளர்ச்சியில் தமிழகம் 20வது இடத்தில் உள்ளது. இதை சுட்டிக்காட்டி இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசிய ஜெயலலிதா, ஆங்கில பத்திரிகை நடத்தியுள்ள ஆய்வு குறித்து மவுனம் காப்பது ஏன்? அதிமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் மூலம், தமிழகம் அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நடைபெறும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகளை பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடுவதில்லை.
ஒரு சில பத்திரிகைகள் மட்டும் துணிச்சலோடு, நீங்கள் செய்யும்தவறுகளை சுட்டிக்காட்டினால், ஆட்சி, அதிகாரபலத்தின் மூலம் அந்த பத்திரிகையை முடக்க நினைப்பது நியாயமா? பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்வதே ஒரு நல்ல அரசுக்கு அழகாகும் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.