அதிமுக ஆட்சியில் மக்கள் அவலங்களுக்கு அளவே இல்லை.. விஜயகாந்த் வேதனை
சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவிப்புகளுக்கோ பஞ்சமில்லை, மக்களின் அவலங்களுக்கோ முடிவில்லை. எனவே தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உண்மையாகவே தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க அரசு ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தலைவிரித்தாடும் குடிநீர்ப் பஞ்சம்
தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு நாளும் குடிநீர் கேட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். சென்னை மாநகரில் ஐந்தாறு நாட்களுக்கு ஒருமுறையும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும்தான் குடிநீர் வழங்கப்படுகிறது.
மாதம் ஒரு முறை மட்டுமே
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல இடங்களில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் அவலநிலை உள்ளது. அதிலும் வழக்கமாக விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பாதியளவே விநியோகிப்பதாகவும், அதிலும் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தண்ணீரை விற்கும் அரசு
மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லாரிகளின் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரைக்கூட ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்வதாக மக்கள் கூறுகின்றனர். அதிமுக அரசே ஒரு லிட்டர் தண்ணீரை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யும் தண்ணீர் வியாபாரியாகி விட்டது.
காற்றோடு காற்றாக போனதா?
வீடுதோறும் இருபது லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்ற அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காற்றோடு, காற்றாக போனதா?
அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதா? என்றால் இல்லை என்பதே தமிழகமக்களின் பதிலாக இருக்கிறது.
அதிகரிக்கும் கடன்
உண்மை நிலை இவ்வாறு இருக்க, சென்னைக்கு குடிநீர் வழங்கும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு மட்டும் ஆயிரத்து 220 கோடி ரூபாய் கடன் உள்ளது. அப்படியானால் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கும் வாரியத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கும்?
எங்கிருந்து வரும் நிதி?
இந்தநிலையில் புதிய குடிநீர் திட்டங்களை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தேவையான நிதிஆதாரம் எங்கே இருந்து வரும்? இத்துறையின் அமைச்சர் இதற்கு பதில் அளிப்பாரா?
முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு என்னவானது?
2013 ஏப்ரல் 16-ம் தேதி 110-விதியின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காஞ்சீபுரம் மாவட்டம் நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நான்காண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாகி தற்போதுதான் ஒப்புதலே வழங்கப்பட்டுள்ளது.
அதோ கதி
அதேபோல் சென்னை அருகே உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மேலும் அன்றைய தினமே எட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் நிலையும் அதோ கதியாகிவிட்டது.
அறிவிப்புகளுக்கு மட்டும் பஞ்சமில்லை
அதிமுக ஆட்சியில் அறிவிப்புகளுக்கோ பஞ்சமில்லை, மக்களின் அவலங்களுக்கோ முடிவில்லை. எனவே தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உண்மையாகவே தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.