மின்வெட்டை நான் காட்டட்டுமா.. என் தொகுதிக்கு வர்றீங்களா?.. நத்தம் விஸ்வநாதனுக்கு விஜயகாந்த் சவால்!
வேலூர்: மின்வெட்டை நான் காட்டட்டுமா.. என் தொகுதிக்கு வாங்க நான் காட்டுகிறேன் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் நேற்று மாலை தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், "மக்கள் தான் சம்பளம் தருகிறார்கள். அவர்களுடைய வரிப்பணம்தான் உங்களுக்கு சம்பளமாக இருக்கிறது. ஜெயலலிதா தனது சொந்தப் பணத்தை மக்களுக்கு தந்தாரா. மிடாஸ் கம்பெனியில் வரும் பணத்தை மக்களுக்கு தந்தாரா. அவர்கள் எடுத்த கொள்கையில் மாறமாட்டார்கள்.
சேலத்தில் மாநாடு கூட்டி எந்தக் கட்சியுடன் கூட்டணி போகலாம் என்று கேட்டேன். அப்போது அதிமுகவுடன் கூட்டணி போகலாம் என்று தொண்டர்கள் சொன்னவுடன் போனேன். பால் விலை, மின்சார கட்டணம், பஸ் கட்டணத்தை உயர்த்தினார்கள். இதையடுத்து நான் வெளியே வந்துவிட்டேன். கொஞ்ச நாள் அனுசரியுங்கள் என்றார்கள். நீங்க அடிக்கிற கொள்ளையை விஜயகாந்த் அனுசரிக்க மாட்டான்.
என்னையா பெரிய காசு. இவங்க வைச்சிருங்காங்களாம் காசு. மக்களிடமிருந்து கொள்ளையடிச்சி வைத்திருக்கிறார்கள். விஜயகாந்த்தை பார்த்து பயப்படவில்லை என்று சொல்கிறார்கள். பிறகு ஏன் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி தர காலதாமதம் ஆனது.
இந்த ஆட்சியில் அம்மா குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும், 4 அமைச்சர்களும் கின்லே, ஆக்குவாபினா தண்ணீரை குடிக்கிறார்கள். ஏன் அம்மா குடிநீர் என்ன ஆனது. இதை யார் கேட்க வேண்டும். முதல் அமைச்சர் கேட்க வேண்டும். அம்மா குடிநீரை குடிக்காமல் வேறு தண்ணீரை குடிப்பது வாட்ஸ் அப்பில் பரவுகிறது. இவர்கள் என்ன ஆய்வு நடத்துகிறார்கள். அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இதற்கு மக்கள் வட்டி முதலுமாக தரவேண்டும்.
நத்தம் விஸ்வநாதன் சொன்னார், வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது என்று. எங்க மின்வெட்டு இல்ல. என் தொகுதிக்கு வாங்க ரிஷிவந்தியத்துக்கு. மின்வெட்டை காட்டட்டுமா. அங்க எத்தனைப் பேர் என்னிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா. நினைச்ச நேரத்தில விடுறாங்க. நினைச்ச நேரத்தில நிறுத்துறாங்க. உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் என்ன ஆனது.
இந்த ஐந்து வருடத்தில் இந்த அம்மா ஆட்சியில் எந்த தொழில்தான் நல்லா இருந்திருக்கு. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழில் நசிந்துவிட்டது. சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்துள்ளது தேர்தல் வருவதற்காகத்தான்" என்று பேசினார்.