கதிராமங்கலத்தைத் தொடர்ந்து நெடுவாசலில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
நெடுவாசல் போராட்டத்தில் இன்று விஜயகாந்த் கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தேமுதிக விஜயகாந்த் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திட்டமானது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதே மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர். எனினும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தமிழக முதல்வரும், மத்திய அ்மைச்சர் பொன் .ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர்.
ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றாமல் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். 2-ஆவது கட்டமாக நடைபெறும் இந்த போராட்டம் இன்று 103-ஆவது நாளை எட்டிய நிலையில் விஜயகாந்த் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் கலந்து கொண்டார். அவர்களுடன் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கடந்த 2 தினங்களுக்கு முன் கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்டு அந்த மக்களுக்கு விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஆதரவு தெரிவித்தனர்.