திமுகவோடு நெருங்கி உயிர் பிழைக்க முயற்சிக்கிறதா தேமுதிக?
சென்னை: அதிமுகவுக்கு எதிராக ஒரே அணியில் இணைவதற்கு திமுகவை, விஜயகாந்த்தின் தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல பிரச்சினைகள் காரணமாக தீவிர அரசியலை விட்டு சற்றே ஒதுங்கியிருப்பதை போன்ற தோற்றம் உள்ளது. இதனால் அவரது கட்சி நிர்வாகிகள் பலரும் ரஜினி கட்சி தொடங்குவாரா, கமல் கட்சி தொடங்குவாரா என்ற ஏக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
தொடர் தோல்விகளால் அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போய் உள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவுக்கு உடனடி தேவை ஆக்ஸிஜன். அந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் திமுகவாகத்தான் இருக்க முடியும் என்று நம்புகிறது தேமுதிக தலைமை.
கட்சியை காப்பாற்ற
இந்த நிலையில், கட்சியை காப்பாற்றிக்கொள்ள திமுக பக்கம் கேப்டன் சாயத் தொடங்கியுள்ளார் என கிசுகிசுக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்காகவே ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு விஜயகாந்த் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வரமாட்டார்கள் என அடித்துச் சொல்லியுள்ளார்.
திமுகவினருக்கு உற்சாகம்
திமுகவுக்கு செல்லும் வாக்குகளை ரஜினி, கமல் ஆகியோரை களமிறக்கி பிரிக்க சதி நடப்பதாக அக்கட்சியினர் குமுறும் நிலையில், விஜயகாந்த் திமுகவினருக்கு உற்சாகம் ஊட்டுவதை போல பேட்டியளித்துள்ளார். அதேநேரம் தான் கட்சி தொடங்கியபோது ரஜினி வாழ்த்தியதாக கூறி ரஜினி ரசிகர்களையும் குளிர்வித்துள்ளார்.
திமுக தரப்பிலும் சிக்னல்
விஜயகாந்த் தரப்பில் இப்படி முன்னெடுப்பு நடக்கும் நிலையில், திமுக தரப்பில், பாமகவுக்கு எதிராக காட்டம் காட்டப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர் துரைமுருகன், திடீரென இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பாமக நிறுவனர் ராமதாசை கடுமையாக சாடியுள்ளார். அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக ராமதாஸ் செயல்படுவதாக தடாலடியாக கூறியுள்ளார்.
பெரும் கூட்டணி
பாமக மற்றும் தேமுதிக ஒரே அணியில் இணைந்து செயல்படுவது கஷ்டம். எனவே திமுக, தன்னை பாமகவிலிருந்து தூரத்தில் வைத்துக்கொள்ள துரைமுருகன் அறிக்கை உதவியுள்ளது. இதன்மூலம் திமுக பக்கம் இருந்தும் விஜயகாந்த்துக்கு சிக்னல் கொடுத்தாகிவிட்டது. திமுகவை பொறுத்தளவில், அதிமுகவுக்கு எதிராக பாமக தவிர்த்து அனைத்து கட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைக்க ரெடியாக உள்ளது. விடுதலை சிறுத்தைகளுக்கும் மறைமுகமாக ஸ்டாலின் அழைப்புவிடுத்தாகிவிட்டது.
தேமுதிகவுக்கு தேவை கூட்டணி
தேமுதிகவை பொறுத்தளவில் கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியோடு போட்டியிட்டு தோல்வி, அதற்கு முன்பு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டபோதும் தோல்வி என தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கிறது. நிர்வாகிகளிடம் தேர்தல் செலவுக்கு கூட பணமில்லை. கடந்த முறை சட்டசபை தேர்தலில் திமுகவோடு இணைந்து தேமுதிக போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தியும் வைகோ வலியுறுத்தலுக்கு பணிந்த விஜயகாந்த் பெரும் சூடுபட்டுக்கொண்டார். எனவே விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகளின் ஒரே அடைக்கலம் இப்போது திமுகதான்.
கருணாநிதி மீது கோபம் தீர்ந்தது
விஜயகாந்த் அளித்துள்ள அந்த பத்திரிகை பேட்டியில், கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால், இந்த ஊழல் ஆட்சி தொடர விட்டிருக்கமாட்டார். ஸ்டாலினாலும், பன்னீர்செல்வத்தாலும் அது முடியவில்லை என கூறி கருணாநிதியின் சாணக்கியத்தனத்தை புகழ்ந்துள்ளார். இதன்மூலம் மண்டப இடிப்பு விவகாரத்தில் கருணாநிதி மீது இருந்த அதிருப்தி காணாமல் போய்விட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.