உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. நிர்வாகிகள் கருத்தால் கடுப்பில் விஜயகாந்த்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமமானது என நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது தேமுதிக. ஆனால் டெபாசிட்டைதான் தேமுதிக பறிகொடுத்தது.
இதனால் மக்கள் நலக் கூட்டணியோடு இனி கூட்டணியே வேண்டாம் என கூறி வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள். இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை விஜயகாந்த் நேற்று நடத்தினார்.
தற்கொலைக்கு சமம்
இக்கூட்டத்தில் பேசிய பலரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவே வேண்டாம்... இது தற்கொலைக்கு சமம் எனக் கூறியுள்ளனர். மேலும் உள்ளாட்சித் தேர்தலை அப்புறம் பார்க்கலாம்.. முதலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என்றும் கெடுவும் விதித்தனர்.
கட்சியை விட்டு போங்க
நிர்வாகிகளின் இந்த பேச்சால் விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்தாராம். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லுகிறவர்கள் மட்டும் கட்சியில் நீடிக்கலாம்... மற்றவர்கள் எல்லாம் கட்சியை விட்டு போய்விடுங்கள் என காட்டமாக கூறி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாம்.
உடனே கட்சி மாறிய நிர்வாகிகள்
விஜயகாந்த் இப்படி பேசியதால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் நேற்றே கட்சி தாவவும் தொடங்கிவிட்டனர். இத்தனை ஆண்டுகாலம் சொந்த காசை போட்டு கட்சி பணி செய்த எங்களுக்கு இதுதான் மரியாதையா? என கொந்தளித்து கிடக்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.
எதிர்காலமே கேள்வி குறி
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என விஜயகாந்த் முடிவெடுத்தால் நிச்சயம் தேமுதிக கலகலக்கும். அதுவும் மக்கள் நலக் கூட்டணியோடு மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதாக அறிவித்தால் கட்சியே காணாமல்தான் போகும் என்கின்றனர் தேமுதிகவினர்.